ஜல்லிக்கட்டு ரத்து: களையிழந்த அலங்காநல்லூர் - வீடுகளில் கருப்புக்கொடி… கடையடைப்பு
மதுரை: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டு கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என சில அமைப்பினர் அறிவித்துள்ளதால் வாடிவாசலை பூட்டி போலீசார் சீல்வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டியை முன்னிட்டு மதுரையில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இதனைக் காண உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.
ஜல்லிக்கட்டு தடை
ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு கடந்த மே மாதம் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மாடு வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எப்படியும் பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி விடும் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பண்டிகை நெருங்கி வந்தும், தடை விலகுவதற்கான வாய்ப்பு நெருங்கி வரவில்லை. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
கடையடைப்பு
இதனால் பொங்கல் தினத்தன்று நடைபெற வேண்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, நேற்று நடைபெற வேண்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு போன்றவை நடைபெறவில்லை. இதனை கண்டித்து கறுப்புச்சட்டை பேரணி, கடைகள் அடைப்பு என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் இன்று (17-ந்தேதி) ஜல்லிக்கட்டு நடைபெறும் நாள் என்றாலும் அதற்கு அனுமதி இல்லாததால் அங்கும் நேற்று கடைகளை அடைத்து கிராமமக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். மேலும் வீடு, கடைகளின் மேற்கூரையில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. 3வது நாளாக இன்றும் அங்கு கறுப்புக்கொடி கட்டப்பட்டே இருந்தது.
போலீஸ் குவிப்பு
தடையை மீறி யாரும் காளைகளை அவிழ்த்து விட்டு விடக்கூடாது என கருதி அலங்காநல்லூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூருக்கு வரும் மதுரை சாலை, சர்க்கரை ஆலை ரோடு, வாடிப்பட்டி ரோடு, பாலமேடு ரோடு பகுதிகளில் இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
வாடிவாசலுக்கு சீல்
மேலும் காளைகளை திறந்து விடும் வாடிவாசலை அடைத்து, போலீசார் சீல் வைத்து அங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஜல்லிக்கட்டு தடை குறித்து தெரியாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், அலங்காநல்லூர் வந்தனர். ஜல்லிட்டு திடல் களையிழந்து கிடப்பதை பார்த்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தெய்வகுற்றம்
கிராம மக்களின் சிலர், கோவில் காளைகளுக்கு வழிபாடு செய்யாவிட்டால் தெய்வகுற்றமாகிவிடும். அவைகளை வெளியில் அழைத்து வந்தால் ஜல்லிக்கட்டு நடத்தி ஆக வேண்டும் என்றும் கூறினர்.
கண்டன சுவரொட்டி
இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் சார்பில் அலங்காநல்லூரில் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதா ஆகியோர் படத்துடன் நீதிதேவதை தராசுடன் நிற்பது, மாடுகளை வீரர்கள் பிடிப்பது போன்ற படங்களையும் இணைத்து இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
தடை ஏன்?
தமிழர்களின் பாரம்பரியத்திற்கு தடையா? தமிழர்களின் வீர விளையாட்டான உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏன்? சாலை பயணத்தின்போது விபத்து ஏற்பட்டால், நாட்டின் போக்குவரத்துக்கு தடை வருமா? மாடு, ஆடு, கோழி இறைச்சியாக பயன்படுத்துவதால் அதற்கு தடை வருமா?
பாரம்பரியமாக எங்கள் கடவுள்களுக்காக வீட்டில் வளர்க்கும் காளைகளோடு விளையாடும் விளையாட்டுக்கு தடை என்றால் எங்கள் இறைவனை வணங்க தடையா?
உணர்வுகளின் கோரிக்கை
விலங்குகளுக்கு கொடுக்கும் நீதி, மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லையா! இனி இந்த ஜனநாயகத்தில் உயிர் வாழ தகுதி இழந்து விட்டோமோ! இனி உயிர் வாழவா! அல்லது உயிரை விடவா! இது எங்கள் எதிர்ப்பு அல்ல. எங்கள் உணர்வுகளின் கோரிக்கை.
புதிய சட்டம் இயற்றுக
உச்சநீதிமன்ற நீதி தேவதையே, கருணை காட்டுங்கள். மத்தியில் ஆட்சிபுரியும் மத்திய அரசே, மிருகவதை தடை சட்டத்தில் இருந்து வீட்டில் வளர்க்கும் எங்கள் காளைகளை நீக்க வேண்டும். மக்களாட்சி நடைபெறும் மாநில அரசே, ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட புதியதாகவும், இறுதியாகவும், உறுதியாகவும் சட்டம் இயற்றுக. உங்களை எல்லாம் நம்பி இருக்கும் இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் என அந்த கண்டன போஸ்டரில் ஒட்டப்பட்டுள்ளது.
தடையை மீறி
தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ளதால் அலங்காநல்லூரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீதி, வீதியாக வலம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.