தாலி அகற்றும் நிகழ்வுக்கு எதிர்ப்பு... தி.க. தலைவர் வீரமணி உருவப்படத்தை எரித்த ஹெச். ராஜா!!
சென்னை: தாலி அகற்றும் நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்து பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் உருவப்படம் எரிக்கப்பட்டது.

திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 14-ந் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா, இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்பட 22 அமைப்புகள் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கி.வீரமணியின் உருவப்படம், கருப்புச் சட்டை ஆகியவை எரிக்கப்பட்டன.

வீரமணிக்கு ஒரு மாதம் 'கெடு'- ஹெச். ராஜா
இந்த ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹெச். ராஜா பேசியதாவது:
தாலி கட்டிக் கொள்வதை விமர்சிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை. தாலி அடிமை சின்னம் என்று சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றால் தாலி அகற்றியவர்களை குடும்ப பெண்கள் இல்லை என்று சொல்லும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

மாட்டுக்கறி விருந்து என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிட தடை கிடையாது. மான்கறி சாப்பிடத்தான் தடை உள்ளது.
இந்த போராட்டத்தின் வாயிலாக கி.வீரமணிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். பெரியார் சிலைகளில் எழுதப்பட்டுள்ள கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவர்கள் காட்டு மிராண்டிகள் என்ற வாசகங்களை இன்னும் ஒரு மாதத்துக்குள் அழிக்க வேண்டும்.

இல்லையெனில் நாங்களும் மோசமான வார்த்தைகளை எழுதுவோம். தாலி அகற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹெச். ராஜா பேசினார்.












Click it and Unblock the Notifications