சென்னையில் தம்பிதுரை வீட்டில் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் வீட்டில் ஆலோசனை நடத்தினர்.
சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டில் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
தமிழக அரசியலில் கடந்த சில நாள்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அமைச்சர் விஜபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியதாக தினகரனுக்கு சம்மன், அதிமுக இணைவு, எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் ரெய்டு உள்ளிட்டவை நடந்தன.

இதற்கிடையே அதிமுக அம்மா அணி அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதையடுத்து தினகரன் கட்சியை விட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பாலமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செயல்பட்டு வருகிறார்.
அவர் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி இரு அணிகளும் இணைவதற்கான காரணத்தை எடுத்துக் கூறினார். இதனிடையே ஓபிஎஸ் தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது. இதனையடுத்து இரு அணிகளின் சார்பில் விரைவில் குழு அமைக்கப்படுகிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தம்பிதுரை இல்லத்தில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், ஓ.பி.எஸ். அணியுடனான பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications