தினகரனுக்கு 'ஜெயில்' உறுதி... அடுத்து என்ன? கோட்டையில் எடப்பாடியுடன் தம்பிதுரை திடீர் ஆலோசனை!
டிடிவி தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை இன்று திடீரென சந்தித்து ஆலோசனை
சென்னை: இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரமும் பிடிபடலாம் என்கிற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்ற வேண்டும் எனில் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே முடியும் என்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எனவே சசிகலா குடும்பத்தினரை கழற்றி விட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியன்று இதனை டிடிவி தினகரனின் வீட்டில் சந்தித்து தம்பித்துரை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும், அதனை ஏற்க டிடிவி தினகரன் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
லஞ்சம் வழக்கு
இந்த சூழ்நிலையில் டெல்லியில் இன்று அதிகாலையில் சுகேஷ் சந்திரா என்ற நபர் டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவர் இடைத்தரகர் என்பது தெரியவந்துள்ளது.
டிடிவி தினகரன் மறுப்பு
சுகேஷ் சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
டெலிபோன் உரையாடல்
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் பேசிக் கொண்ட டெலிபோன் உரையாடலை டெல்லி போலீஸ் கைப்பற்றியும் உள்ளனர். நாளை காலை சம்மனுடன் டெல்லி போலீஸ் சென்னை வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் டிடிவி தினகரன் கைது செய்யப்படவே வாய்ப்புள்ளது.
பெங்களூரு போன தினகரன்
இதனிடையே பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றுள்ளார். அங்கு வருமான வரி சோதனை குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றியும் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தம்பித்துரை திடீரென வந்தார்.
தம்பித்துரை ஆலோசனை
லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறை செல்ல நேரிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தம்பித்துரை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.
இணைய முடிவு
தமிழகத்திற்கு விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். தற்போது அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று பட்டால் மட்டுமே முடியும் என்று இரு அணியினருமே உணர்ந்துள்ளனர். ஆகையால் டிடிவி தினகரனை கழற்றி விடுவது பற்றியும், ஒபிஎஸ் அணியினருடன் இணைந்து செயல்படுவது பற்றியும் தலைமைச் செயலகத்தில் தம்பித்துரை ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.