இறைவன் மீது ஆணையாக நான் நேர்மையான அரசியல்வாதி - தமிமுன் அன்சாரி எம்எல்ஏ
பண பேரத்தில் நாங்கள் ஈடுபடவில்லை அரசியலில் நேர்மையை கடைபிடிக்கிறோம் என்று எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
சென்னை: இறைவன் மீது ஆணையாக நாங்கள் நேர்மையானவர்கள், அரசியலில் நேர்மையை கடைபிடிக்கிறேன் எதற்காகவும் பணம் பெறவில்லை என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க 3 எம்எல்ஏக்களுக்கு தலா 10 கோடி கொடுக்கப்பட்டதாக ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்எல்ஏ சரவணன் கூறியதாக ஆங்கில சேனலில் வீடியோ ஒளிபரப்பானது. தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோருக்குத்தான் ரூ. 10 கோடி தரப்பட்டதாக கூறினார்.

தமிமுன் அன்சாரி
நாடு முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று சட்டசபையிலும் இந்த பணபேர விவகாரம் புயலைக்கிளப்பியது. சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, பண பேர விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கூவத்தூர் செல்லவில்லை
ரம்ஜான் நோன்பு இருக்கும் தூய மனதோடு கூறுகிறேன்,நான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கேட்டு அமைச்சர் செங்கோட்டையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார்.

வாரிய தலைவர் பதவி
உங்களின் தொகுதி மற்றும் சமுதாய கோரிக்கைகளையும் தாருங்கள் என்றார் நாங்களும் கொடுத்தோம். உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளை தாருங்கள் என்று சொல்லி அனுப்பினோம். அப்போது மஜக தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.

அரசியலில் நேர்மை
சரவணன் எம்எல்ஏவின் குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுக்கிறோம். நிராகரிக்கிறோம். பண பேரத்தில் நாங்கள் ஈடுபடவில்லை அரசியலில் நேர்மையை கடைபிடிக்கிறோம். இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நாங்கள் நேர்மையானவர்கள். வாளை எடுத்து எங்கள் இதயத்தை பிளந்து காட்ட முடியாது.

அபாண்டமான குற்றச்சாட்டு
அரசியலில் நேர்மையை கடைபிடித்த காமராஜர், கக்கன் வழியை பின்பற்றியே எங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த 2 தினங்களாகவே பணம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. என் மீதான இந்த அபாண்ட குற்றச்சாட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் அரசியலுக்கு வந்தோம், நமக்கு இதுவெல்லாம் தேவையா என்பது போன்ற மனநிலை உருவாகியிருக்கிறது.
எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவி கேட்டது மட்டும்தான் உண்மை என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications