முகப்பேர் அருகே பால்கனி இடிந்து விபத்து: பேத்தியை காப்பாற்றி உயிரைவிட்ட பாட்டி.. தாத்தாவும் பலி!
சென்னை முகப்பேரில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே ஒருவர் பலியான நிலையில் இன்று மற்றொருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் நடராஜன் 55. இவரது மனைவி லட்சுமி 48. இருவருமே பூ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி, சுகன்யா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்தாகிவிட்டது. இதில் சுகன்யாவுக்கு ரக்ஷனா என்ற கைக்குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி வீட்டின் லட்சுமி தனது வீட்டின் முதல்மாடியில், தனது கணவர் நடராஜடனுடன் பேசியபடி, குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு லட்சுமி பூ கட்டிக் கொண்டிருந்தார். அப்போது மராமரத்து வேலைகள் நடைபெற்று வரும் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது.
ஆபத்தை உணர்ந்த லட்சுமி சுதாரித்து, பேத்தியை இறுக்கி குனிந்து அணைத்துக் கொண்டார். இதில் அனைத்து இடிபாடுகளும் லட்சுமி மேல் விழுந்தது. எனினும் இடிபாடு விழுந்த வேகத்தில் 3 பேருமே கீழே விழுந்தனர். இதில் பேத்தியை கடைசி நிமிடம் வரை கட்டி அணைத்து காப்பாற்றிய லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நடராஜனுக்கு கால் முறிந்ததுடன் பலத்த காயம் ஏற்பட்டது. பாட்டி காப்பாற்றியதால், குழந்தைக்கு லேசான காயமே ஏற்பட்டது.
உடனடியாக நடராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தனது மகளை காப்பாற்றிய அம்மாவின் உடலை கண்டு மகள் சுகன்யா கதறி கதறி அழுதார். இந்த விபத்து குறித்து நொளம்பூர் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜன் இன்று காலை உயிரிந்துள்ளார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதால் சுகன்யாவின் குடும்பம் மேலும் ஒரு இன்னலில் சிக்கியுள்ளது அப்பகுதி மக்களை பெரிதும் பாதித்துள்ளது.