ஏற்காடு வெற்றி முதல்வருக்கு சமர்ப்பணம்: அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா
சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா, தனது வெற்றியை தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 4ம்தேதி நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தல் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில், அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா 78 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு மாலை 6.10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சபாபதி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

அப்போது, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, செம்மலை எம்.பி., எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட பின்னர், பத்திரிக்கையாளர் மத்தியில் பேசிய சரோஜா கூறியதாவது :-
"ஏற்காடு இடைத்தேர்தலில் என்னை வேட்பாளராக நிறுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எனது கோடானக்கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி எனக்கு கிடைத்தது அல்ல. முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
ஏற்காடு தொகுதியில் எனக்கு பெருவாரியான வாக்களித்து வெற்றிபெற செய்த வாக்காளர்களுக்கும் கோடானக்கோடி நன்றிகளை காணிக்கையாக்குகிறேன். இந்த வெற்றியின் மூலம் ஏற்காடு தொகுதியில் எனது கணவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்ய கடமைப்பட்டு உள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications