அமமுக தான் டாப்பு.. அதிமுக டூப்பு.. பாட்டாவே பாடிட்டாரே தங்க தமிழ்செல்வன்!
அமமுகதான் வெற்றி பெறும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: திருவாருர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு பிறகு அமமுக தான் டாப்பு, அதிமுக ஒரு டூப்பு என்பது தெரியவரும் என்று தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன். தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை. சாதகமான தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதலமைச்சர் நியமனம் செய்யப்பட்டு ஆட்சி தொடரும்.

திருவாருர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும். அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் அமமுக தான் வெற்றி பெறும். அப்போது அமமுக-தான் டாப்பு. அதிமுக டூப்பு என்பது தெரியவரும். அதன் பின்னர் ஆட்சியையும் கட்சியையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அதிமுக நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அதிமுக மேல்முறையீடு செய்யாதது ஏன்? இதிலிருந்து திமுக, அதிமுக கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரியவருகிறது. அதேபோல, சமீபகாலமாக பாஜகவோடு திமுக நெருங்கி வருகிறது.
இவ்வாறு தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.












Click it and Unblock the Notifications