காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: தஞ்சையில் முழுஅடைப்புப் போராட்டம்
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தஞ்சையில் நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டமும், தஞ்சை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு - முற்றுகை
தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி சாலை - பாலாஜி நகரில் இயங்கும் இந்திய அரசின் உற்பத்தி வரிவசூல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காலை 10 மணிக்கு, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெறுகின்றது.
திருச்சி
திருச்சியில், காலை 10 மணிக்கு சேவா சங்கம் அருகிலுள்ள இந்திய அரசு உற்பத்தி வரி(எக்சைஸ்) அலுவலகம் முற்றுகைப் போராட்டம் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெறுகின்றது. இப்போராட்டத்தில், பல்வேறு உழவர் மற்றும் தமிழர் அமைப்புகள் பங்கேற்கின்றன.
திருவாரூர்
திருவாரூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம், காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது. தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. வலிவலம் மு.சேரன் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், உழவர் அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
நாகை
நாகப்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன் தலைமையில் நடைபெறகின்றது. போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பிலுள்ள உழவர் இயக்கங்களும், அரசியல் இயக்கங்களும் பங்கேற்கின்றன.
சென்னை
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், காலை 10 மணிக்கு பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன், பூவுலகின் நண்பர்கள் திரு. சுந்தர்ராசன், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் தோழர் மா.சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அஞ்சல் நிலையம் எதிரில் மாலை 4 மணிக்கு தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோவை - ஈரோடு
இதேபோல் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை செயலாளர் தோழர் இராசேந்திரன் தலைமையேற்கிறார். தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டன உரையாற்றுகின்றனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணிக்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. குமாரசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மதுரை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரை செயலாளர் ரெ.இராசு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இராமநாதபுரத்தில் அரண்மனை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.