களை கட்டும் தேர்தல் திருவிழா... ஓட்டுக்காக காலில் விழும் கட்சியினர்...
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டும் இருப்பதால் சுட்டெரிக்கும் சூரியனையும் தாண்டி பிரசாரக் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அரசியல்வாதிகள் ஒருபுறம்... வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர், நடிகையர்கள் மறுபுறம் என வாக்காளர்களை மாறி மாறி சந்தித்து ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ஓட்டு கேட்கவே வேணாம்... கவனிச்சா மட்டும் போதும்... அம்புட்டு ஓட்டையும் அள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டு ‘கவர்' பண்ணவும் ஒரு கூட்டம் தயாராகிவருகிறது.

மேள தாளம் முழங்க…
வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கப் போகும் போது வசதிக்கேற்ப செண்டை மேளம், ட்ரம்ஸ் மேளம் என களை கட்டுகிறது.... வசதியில்லா கம்யூனிஸ்ட்டு கட்சி வேட்பாளர்கள், தாரை, தப்பட்டை என பட்டையை கிளப்புகின்றனர்.

குத்தாட்டத்திற்கு குறைவில்லை
தேர்தல் திருவிழாவில் ‘குடி' மகன்கள் பாடுதான் படு குஷி... எந்த பாட்டு போட்டாலும் ஆடுவோம்ல என்று டாஸ்மாக் தயவால் குடித்துவிட்டு குத்தாட்டம் போடுகின்றனர்.

தெளிய… தெளிய…
ஆடிய ஆட்டத்தில் அசந்து போன குடிமகன் ஒருவர்... அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்குப் போய் ஒரு குவாட்டர் வாங்கி ராவாக ஊற்றிக்கொண்டு வந்து மீண்டும் ஆட்டத்தை தொடர்வதும் நடக்கிறது.

அம்மா… தாயே…. எப்படியாவது…
பங்குனி வெயில் பட்டையை கிளப்ப... அனல் காற்று முகத்தில் அறைய... வீதி வீதியாக நடந்து வரும் வேட்பாளர்கள்... ( ஜெயிச்சப்பிறகு தொகுதியே மறந்து போவது வேறு விசயம்) அசராமல் அன்பொழுக பேசி வாக்கு கேட்கின்றனர்.

பாட்டியை கட்டிபிடி
வயதான தாய்மார்கள் இருந்தால் எம்.ஜி.ஆர் பாணியில் கையை பிடித்து... சில சமயம் கட்டிப்பிடித்தும்... பல சமயம் காலில் விழுந்து வாக்கு கேட்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

அன்புமணி அட்டாக்
பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்தான் எம்.ஜி.ஆர் பாணியை அதிகம் கையாளுகிறார். மலைகிராமங்களில் வாக்கு சேகரிக்கும் போது, எம்.ஜி.ஆர்., பாணியில், முதியவர்களை ஆரத்தழுவி, அன்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்களும், தொண்டர்களும் நெகிழ்ச்சி அடைகின்றனர்.

காலிலும் விழுவோம்ல
ஆரணி லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக, தேமுதிகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். செஞ்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற தேமுதிகவினர் பொதுமக்களின் காலில் தடாலடியாக விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தனர்.

களி சாப்பிடுவோம்ல...
உச்சி வெயில்ல ஓட்டு கேட்டு வந்திருக்கீங்க இந்தாங்க ஜில்லுன்னு களி சாப்பிடுங்க என்று மக்கள் கொடுத்ததை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டு அசரடிக்கின்றனர் தேமுதிகவினரும், பாமகவினரும்.

நானும் விழுவேன்ல...
தேமுதிக, பாமகவினர்தான் காலில் விழுவார்களா? நானும் விழுவேன் என்று ஈரோடு லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் ஹெச்.பவித்திரவள்ளி முதியவர்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

நாங்களும் காலில் விழுவோம்
காலில் விழுந்து ஓட்டு கேட்கும் பாணி பிரசாரத்தை, அதிமுகவினரும் தொடங்கியுள்ளனர், திருவண்ணாமலை நகரில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், வாக்காளர்களின் காலில் விழுந்து அதிமுகவுக்கு வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

தேர்தல் டிசைன்கள்
அம்மா படம் போட்ட முந்தானை சேலை... சூரியன் படம் போட்ட டி சர்ட், முரசு, மாங்கனி, பம்பரம், தாமரை என சின்ன டிசைன்கள் அச்சடிக்கப்பட்ட ஆடைகளுக்கு செம வரவேற்பு... இதை சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி பட்டுவாடா செய்கின்றனராம்.

பத்துக்கு மேல பட்டுவாடா
2 ரவுண்டு பிரசாரம் முடிஞ்சு போச்சு.... இன்னும் கவனிப்பு இல்லையே என்று கவலையோடு இருப்பவர்களுக்கு... இப்பவே கொடுத்த செலவு பண்ணிட்டு மறந்துடுவாங்க... பத்து தேதிக்கு மேல... குறிப்பா பத்து மணிக்கு மேலா பட்டுவாடா செய்யச் சொல்லி உத்தரவு போடப்பட்டுள்ளதாம். ஓட்டை பிரிச்சாவது போட்டுருங்கப்பா... என்பதால் நிர்வாகிகளின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை உருவாகியுள்ளதாம்.

பேப்பர்… பால் பாக்கெட்
செய்தித்தாள்களில் ஆயிரம் ரூபாய் கவர்களை அட்டாச் செய்து போடலாம்... பாக்கெட் பால் போடுவது போல வீடுகளில் பணம் பட்டுவாடா செய்யலாம் என்று புதுபுது ஐடியாக்களையும் அரசியல் கட்சியினர் புகுத்தி வருவதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications