‘பொன்னியின் செல்வி' பட்டத்தை ஜெ.வுக்கு அளித்த விவசாயிகள் இன்று கண்ணீரில்- மு.க.ஸ்டாலின்
சென்னை : ஜெயலலிதாவுக்கு பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை வழங்கிய தமிழக விவசாயிகள் இன்று கண்ணீரில் உள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவிரி தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை அதிமுக அரசு வஞ்சித்துள்ளது என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது..
ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாசனத்துக்காக, ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு நீர் பற்றாக்குறையால் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசின் அராஜக மனப்பான்மை மீண்டும் அரங்கேறியுள்ளது.
அ.தி.மு.க. அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் 2001 (2001-2006) மற்றும் 2011 (2011-2016) என இரண்டு முறை மட்டுமே உரிய காலத்தில் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
அந்த இரண்டு முறையும் கூட, தி.மு.க அரசு மேட்டூர் அணையில் போதுமான நீர் சேமிப்பை முந்தைய ஆட்சியின் போது ஏற்பாடு செய்திருந்ததே காரணம்.
ஆனால் ஜெயலலிதாவுக்கு ‘பொன்னியின் செல்வி' எனும் பட்டத்தை அளித்த காவிரி டெல்டா விவசாயிகள் இன்று கண்ணீரில் உள்ளனர்.
கடலூர் மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தங்களுடைய அவல நிலையை விரக்தியுடன் வெளிப்படுத்தி எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். வரவிருக்கும் குறுவை சாகுபடி தவறுகின்ற காரணத்தால் கடுமையான வறுமை மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காவிரி டெல்டா பகுதிகளை வறட்சியால் வாடும் பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
இது தவிர, காவிரி பிரச்சனையில் சுமூகமான நிலை ஏற்பட மாநில அரசு, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத மோசமான நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசின் மிகப்பெரிய நிர்வாக தோல்வியை காட்டுகிறது.
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் அறிவித்ததை அ.தி.மு.க. அரசு கொண்டாடிய அதே நேரம், இந்த அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவுமில்லை, அதற்கான முயற்சி எதையும் எடுக்கவில்லை.
அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி எதுவும் எடுக்கவுமில்லை. நீர் பகிர்வு மீதான முடிவை எட்டுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் அவசியமானது.
இப்படியான முக்கிய பிரச்சனையில் மௌனம் காத்து தமிழக அரசு மீண்டும் ஒரு முறை விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது பெரும் கவலைக்குறியது. தமிழக அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.