வெல்லப்போவது யாரு?.... ஆர்.கே நகர் தேர்தல் தீர்த்து வைக்கப்போகும் பங்காளிச் சண்டை!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளுடன் மோதுவதை விட இரட்டை இலை சின்னத்தை வென்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும், சின்னத்தை பறிகொடுத்த தினகரனுக்கும் தான் கடுமையான போட்டி இருக்கிறது.
சென்னை : எதிர்க்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதை விட ஆர்கே நகர் இடைத்தேர்தலில் உட்கட்சியில் யாருக்கு பலம் என்பது தெரிந்து விடும் என்பதே தற்போதைய அரசியல் பரபரப்பாக பார்க்கப்படும். மக்களின் ஆதரவு சின்னத்தை பெற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கா அல்லது சசிகலா குடும்பத்திற்கா என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தப்போகிறது.
ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவிற்கு எப்போதுமே எதிர்க்கட்சிகள் தான் சிம்மசொப்பனமாக இருக்கும். ஆனால் உள்கட்சியில் நடக்கும் பங்காளிச் சண்டை அதிமுகவை விடாமல் துரத்தி வருகிறது. ஆனால் இதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் 5ம் தேதி அதிமுகவின் தலைமையாகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா திடீரென மரணமடைந்தார். இதனயைடுத்து 2 மாதங்களில் கட்சி இரண்டாக பிளவுபட்டது. கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அதாவது ஜெயலலிதாவின் இடத்தை நிரப்ப சசிகலா அந்த அரியாசணையில் அமர நினைத்ததால் வெடித்தது தர்மயுத்தம்.
கட்சி பிரச்னை தீர்ந்தது
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சசிகலாவிற்கு பெங்களூரு சிறைக்கான பாதையை காட்ட, கட்சியின் நிலைமை தலைகீழானது. இறுதியில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்கு அறிவித்ததையடுத்து கட்சி யாருக்கு என்ற பஞ்சாயத்து தீர்ந்தது.
மெஜாரிட்டி அடிப்படையில்
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டுக்கோப்பான கட்சியாக கொண்டு வரப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தான் அதன் பலம். எனவே அதனை பெற்றது ஓபிஸ், ஈபிஎஸ் அணிக்கு சாதகமான விஷயம் தான். மெஜாரிட்டி எம்பி, எம்எல்ஏக்கள் அடிப்படையில் சின்னம் இந்த அணிக்கு ஒத்துக்கப்பட்டுள்ளது.
தீர்மானிக்கப்போகும் மக்கள்
சின்னம் பெற்ற கையோடு ஆர்கே நகர் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவை மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவே வெளிக்காட்டப்போகிறது. இதே போன்று சின்னம் இழந்த தினகரனை மக்கள் அங்கீகரிக்கின்றனரா, சசிகலா குடும்பத்தினருக்கு மக்கள் எவ்வாறு மதிப்பளிக்கின்றனர் என்ற ஏராளமான கேள்விகளுக்கும் இந்த தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது.
திமுகவிற்கு பலமா?
முதல்வர் பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி வரும் தினகரனின் கூற்றைத் தான் மக்களும் விரும்புகின்றனரா? அதிமுக அரசை பாஜக பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப்படுவது தான் மக்களின் கருத்துமா? அதிமுகவில் நடக்கும் பங்காளிச் சண்டையால் திமுகவின் வாக்கு அதிகரிக்குமா என்று பல கேள்விகளுக்கு டிசம்பர் 24ல் தான் முடிவு கிடைக்கப்போகிறது.
அளவுகோல்
இரட்டை இலை பெற்ற கையோடு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி அதிருப்தியில் இருப்பதோடு வேட்பாளர் தேர்விலும் இரண்டு அணிகளும் முட்டிக்கொண்டுள்ளன. எனவே இரண்டு அணிகளும் இணைந்து ஆர்கே நகர் தேர்தலை ஒற்றுமையாக சந்திக்குமா என்ற கேள்வியும் ஒருபுறம் இருக்கிறது. மொத்தத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அதிமுகவின் எதிர்காலத்தை மட்டுமல்ல அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக உள்ளது.