கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது.. காதலி ஸ்வாதி அந்தர் பல்டி.. தப்புகிறாரா யுவராஜ்??
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான இளம்பெண் ஸ்வாதி பிறழ் சாட்சியானதால் அரசு தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.
Recommended Video
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அவரது காதலி ஸ்வாதி பிறழ் சாட்சியானதால் அரசு தரப்பு அதிருப்தியடைந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ். 23 வயதான இவர் கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பியவர் அன்று இரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் 24.6.2015ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.
ஆரம்பத்தில் திருச்செங்கோடு போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்த கோகுல்ராஜ் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை முடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
ஸ்வாதியுடன் காதல்
அப்போது உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஸ்வாதி என்ற மாணவியும் அவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்தபிறகும் அவர்களுக்குள் நட்பு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜூம், ஸ்வாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.
தலைதுண்டிப்பு
அப்போது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட 7 பேர், மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்த இருவரையும் மிரட்டியதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் ஒரு வெள்ளை நிற டாடா சஃபாரி காரில் கடத்திச்சென்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகே கோகுல்ராஜ், ரயில் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாதியும் காதலிப்பதாக கருதிய யுவராஜ் மற்றும் கூட்டாளிகள் கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
முக்கிய ஆதாரம்
மேலும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுல்ராஜை கடத்திச்செல்வதும், ஸ்வாதியை மிரட்டிய காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ ஃபுட்டேஜ்களை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக போலீசார் சேர்த்தனர்.
சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வழக்கில் சாட்சி விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 30.8.2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கோகுல்ராஜை கடைசியாக சந்தித்ததாக கூறப்படுபவரும், அவருடைய காதலியுமான ஸ்வாதி, யுவராஜ் கும்பல் கோகுல்ராஜை கடத்திச்சென்றதை நேரில் பார்த்தவராக கருதப்படும் ஒரே முக்கிய சாட்சியான ஸ்வாதி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
முன்னர் அளித்த வாக்குமூலம்
அப்போது விசாரணையை படம்பிடிக்க பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணை கூண்டு அருகே போலீஸ் தரப்பில் கைப்பற்ற வீடியோ ஆதாரங்கள் ஒளிபரப்பப்பட்டன. அப்போது அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த ஸ்வாதி, அதில் இருப்பது தன்னுடைய உருவம் அல்ல என்று அந்தர்பல்டியடித்தார். ஏற்கனவே திருச்செங்கோடு மற்றும் சிபிசிஐடி விசாரணைகளின்போது வீடியோவில் பதிவாகி இருப்பது தானும், கோகுல்ராஜூம்தான் என்று கூறியிருந்தார் ஸ்வாதி.
யார் என்று தெரியாது
யுவராஜ் உள்ளிட்ட கும்பலையும் அடையாளம் காட்டி வாக்குமூலம் அளித்திருந்த ஸ்வாதி திடீரென்று வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவமே அல்ல என்றும், அந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் மற்றவர்கள் யார் என்றும் தெரியாது எனவும் சாட்சி அளித்தார். மேலும், கோகுல்ராஜை யார் என்று தெரியுமா என்ற அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி கேட்டதற்கு, அவர் நான் படித்த கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால் அவர் யாரென்று தனக்குத் தெரியாது என்று என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும், சிபிசிஐடி போலீசாரும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
கோயிலுக்கா நானா?
கோகுல்ராஜை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை நிற டாடா சஃபாரி கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரை பார்த்து அடையாளம் சொல்லும்படி கேட்டதற்கு, ஸ்வாதி அதுபற்றி தனக்கு தெரியாது என்றார். அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலையில், அவருக்கு உதவியாக அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் சேலம் நாராயணன் ஸ்வாதியிடம் பல கேள்விகளைக் கேட்டார்.
குறிப்பாக, கோகுல்ராஜூடன் நீங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றீர்களா? என்று கேட்டதற்கு ஸ்வாதி, நான் கோயிலுக்கு போகவே இல்லை என்றார் ஸ்வாதி.
ஒற்றை வார்த்தையில் பதில்
சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து, உங்களிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டாரா? என்று கேட்டதற்கு தெரியாது என்று பதில் அளித்தார். மேலும் பல கேள்விகளுக்கு தெரியாது, இல்லை என ஒற்றை வார்த்தைகளிலும் முன்னுக்கு பின் முரணாகவும் பதிலளித்தார் ஸ்வாதி.
ஏமாற்றம் அதிருப்தி
இதையடுத்து இந்த வழக்கின் சாட்சி விசாரணை செப்டம்பர் 18, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். ஸ்வாதி மாற்றி பேசியதோடு பிறழ் சாட்சியாகவும் மாறியதால் அரசுத்தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் பெரும் ஏமாற்றமும் கடும் அதிருப்தியும் அடைந்தனர்.