தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை! பண்டிதர் அயோத்திதாசரை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!
சென்னை: அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள சமூக வலைத்தளப்பதிவில் இவ்வாறு நினைவுகூர்ந்துள்ளார்.
பண்டிதர் அயோத்திதாசருக்கு தமிழக அரசு சார்பில் வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும், தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்.
அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்!
அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க!'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications