விடிய விடிய எரியும் தீ.. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நுரையை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரம்
சென்னை சில்க்ஸில் 85 சதவீத தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் காலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விடும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மீது நுரையை பீய்ச்சி தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 85 சதவீத தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் காலைக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 22 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். சுமார் 150 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் நான்கு புறமும் தீயணைப்பு வாகனம் மூலம் நீரை பீய்ச்சி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சில நிமிடங்களிலேயே 7 வது தளத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 வது தளத்தில் ஊழியர்களுக்கு சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இதற்கிடையே கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த தளத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியேறி வருகிறது. 85 சதவீத தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே விமான நிலையத்தில் இருந்து ராட்சத நுரைக்கலவை எந்திரம் வரவழைக்கப்பட்டது. கட்டிடம் மீது நுரைக்கலவை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காலை 5 மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நடந்தது. ஷிப்ட் முறையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தி.நகரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. துணிகள் எரிந்ததால் கரும் புகை வெளியில் வந்து கொண்டே இருக்கிறது. அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 500 மீட்டர் தொலைவிற்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் 24 மணி நேர அவசர மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று காலைக்குள் முழுவதுமாக தீ அணைக்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை கமிஷனர் சரவணன் தலைமையில் சுமார் 200 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.