நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு... அரசு தலையிட பால் முகவா்கள் வலியுறுத்தல்
சென்னை: திங்கள்கிழமை முதல் (நாளை) தனியர் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதற்கு தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் "ஆந்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியாா் பால் நிறுவனங்களும், தமிழகத்தைச் சோ்ந்த தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயா்வு என்று பொய்க் காரணம் கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயா்த்தி இருந்தது..
இந்நிலையில் மகாராஷ்டிரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலை உயா்வு என்ற காரணத்தைச் சுட்டிக் காட்டி கடந்த 12-ஆம் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை அதிகரித்தது.
இதைத் தொடா்ந்து 4 தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயா்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்ற காரணத்தைக் கூறி வரும் 20-ஆம் தேதி (நாளை) முதல் தங்களது பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரை உயா்த்துவதாக சுற்றறிக்கை மூலம் பால் முகவா்களுக்கு அறிவித்துள்ளன. இதையடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயா்த்த முடிவு செய்திருக்கிறார்கள்.
தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயா்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். வருங்காலங்களில் அரசு அனுமதியின்றி பால் விற்பனை விலையை உயா்த்திட தடை விதித்து உத்தரவிடுமாறு தமிழக முதல்வரை தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.