தீ தின்ற புது மணப்பெண் புனிதா... குரங்கணி காட்டில் கருகிய சோகம்
குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளார் புதுமணப்பெண் புனிதா.
Recommended Video
சென்னை: குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த புனிதாவும் காட்டுத்தீயில் சிக்கி கருகியவர்தான். திருமணமான 44 நாட்களே ஆன நிலையில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பலியாகியுள்ளார் புனிதா.
செங்கல்பட்டு ஜேசிகே நகர் தாழம்பூ தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மனைவி மணிமொழி. இவர்களுக்கு புனிதா,25 என்ற மகளும், கவுதம் என்ற மகனும் உள்ளனர்.
கவுதம் கல்லூரியில் படித்து வருகிறார். புனிதா வேளச்சேரியில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென் பொறியாளராக பணிபுரிந்தார். கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி தான் புனிதாவுக்கும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடந்தது. பாலாஜியும் மென்பொறியாளராக உள்ளார்.
புனிதாவின் ஆர்வம்
புனிதா அவ்வப்போது மன அழுத்தத்தை குறைப்பதற்காக வெளி இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவது வழக்கம். அந்த வகையில், புனிதாவுக்கு டிரக்கிங் செல்வதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இவரது தோழி மூலம் சென்னை டிரக்கிங் கிளப் இருப்பதை அறிந்து அவர், அதில் தன்னை பதிவு செய்து கொண்டார்.
மகளிர் தின பயணம்
மகளிர் தினத்தை முன்னிட்டு குரங்கணி மலைப்பகுதிக்கு டிரக்கிங் அழைத்து செல்லப்படுவதை அறிந்த புனிதா டிரக்கிங் செல்ல கடந்த பிப்ரவரி மாதம் பதிவு செய்து கொண்டார். இது திரும்பி வர முடியாத கடைசி பயணமாக அமையப்போகிறது என்று அப்போது அவருக்கு தெரியாது
சந்தோசமாக கிளம்பிய புனிதா
திருமணம் முடிந்து 44 நாளில் துணிச்சலுடன் டிரக்கிங் செல்ல புனிதா தயாரானார். கணவரும், தனது மனைவி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார். திட்டமிட்டபடி சென்னை டிரக்கிங் கிளப் குழுவுடன் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். சனிக்கிழமையன்று சந்தோசமாக பொழுதை கழித்த அவருக்கு அதுதான் கடைசி இரவு என்று தெரிந்திருக்க நியாயமில்லை.
உயிர் போகும் தருணம்
ஞாயிறன்று காட்டு தீ பரவியதில் பதற்றமடைந்த புனிதா, தனது உறவினர்களை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் சிக்னல் கிடைக்கவே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொன்னார். ஆடையில் பற்றிய தீ உடல் முழுவதும் பரவியதில் உடல் கருகி பலியானார் புனிதா. புதுமணப்பெண்ணுக்கு உரிய தாலியின் நிறம் கூட மாறும் முன்பாகவே கனவுகளுடன் கருகிப் போனார் புனிதா.
கதறிய கணவர்
புனிதாவின் மரண செய்தியை கேள்விப்பட்டு அவரது கணவர் பாலாஜி, புனிதாவின் தந்தை ஜெயசங்கர், உறவினர்கள் கதறி துடித்தனர். கணவரும், தந்தையும் தேனிக்கு வந்து புனிதாவின் உடலை செங்கல்பட்டுக்கு கொண்டு வந்தனர். இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. திருமணமாகி 44 நாட்களில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற புனிதாவை தீயின் நாக்குகள் கபளீகரம் செய்து விட்டன.
புது மாப்பிள்ளை மரணம்
இதேபோல குரங்கணிக்கு மலையேற்றப்ப பயிற்சிக்கு வந்த புதுமண தம்பதிகளான விவேக், திவ்யா தம்பதியரில் விவேக் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். திவ்யா உயிருக்கு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.