சென்னைவாசிகளுக்கு கூலான செய்தி... இன்றும் மழைக்கும் வாய்ப்பாம்!
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கனமழையும் பெய்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
அதன்பிறகு மழை பெய்யவில்லை. எனினும் குளிர்ந்த சூழலே நிலவியது. இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி, மெரினா, மயிலாப்பூர், சேப்பாக்கம், மந்தைவெளி ஆகிய இடங்களில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. பிறகு நின்றுவிட்டது.
அதே வேளையில் கோவை மாவட்டம் வால்பாறையில் பருவமழை பெய்தது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சின்னக்கல்லாரில் 1 செ.மீ மழை பதிவானது. தற்போது வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வழக்கம்போல் இரவு நேரங்களில் லேசான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை சென்னையில் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் இருக்கும்.