அஞ்சலி செலுத்தினால் குண்டாஸ்.. பலவீனமான அரசை சட்டப்படி எதிர்கொள்ள.. மே 17 இயக்கம் தயார்
முள்ளிவாய்க்காலில் மரித்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வோம் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
சென்னை: ஈழத்தமிழர்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கம் மே 21ம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மே 17 இயக்கம் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தடையை மீறி மே 17 இயக்கத்தினர் ஊர்வலமாக மெரினாவில் சென்று அஞ்சலி செலுத்த முயன்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அவர்களை விடுவிக்காத போலீசார் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

கண்டனம்
இதுகுறித்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தியதாக 4 தோழர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது பலவீனமான தமிழக அரசு.

அஞ்சலிக்கு தடை
தமிழர் கடல் சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மே 21 அன்று மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. அதற்கு தடை விதித்த தமிழக அரசின் காவல் துறை, நினைவேந்தல் நிகழ்விற்கு ஒன்றுகூடிய பல்வேறு இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறையை ஏவி அதில் 400க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அதில் மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளியது.

குண்டர் சட்டத்தில் வழக்கு
இந்நிலையில் இன்று (29-05-17) கைது செய்யப்பட்டோரில் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் மற்றும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் ஆவணப்படம்
ரேசன் கடைகளை மூடுப்படுவது குறித்தும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் நிர்மலா சீதாராம் wto வில் கையெழுத்து இட்டதையும், மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து அதனுடய பாதிப்புகளை விளக்கி, முழுமையான ஆய்வுப் பூர்வமான விவரங்களை முதன்முறையாக வெளியிட்டது மே பதினேழு இயக்கம். "பாலைவனமாகும் காவிரி டெல்டா" என்ற ஆவணப்படத்தையும், அதற்கான அறிவியல் பூர்வமான விளக்கப் புத்தகத்தையும் உருவாக்கி தமிழகமெங்கும் கொண்டு சென்றது மே பதினேழு இயக்கம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம்
பண மதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் என்று பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை மே 17 இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் கலவரம் நிகழ்த்திய காவல்துறையினர் மீது பாதிக்கப்பட்டோர் சார்பாக வழக்குகள் பதிவு செய்யவும் இழப்பீடு கொடுக்கவும் நீதியரசர் இராஜேஸ்வரன் கமிஷனில் முயற்சி எடுத்தும் வருகிறது.

மீனவர்கள் படுகொலை
மேலும் தமிழக மீனவர்கள் கொலை, காவிரி பிரச்சனை, ஆணவக்கொலைகள், ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் செயலற்றத்தன்மையை மே 17 இயக்கம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்தது. மே 17 இயக்கத்தின் இத்தகைய செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு , பயமுறுத்தும் விதமாக இது போன்று சட்டவிரோதமாக பலவீனமாக இருக்கும் தமிழக அரசின் காவல்துறையை பாஜக அரசு தன்னிச்சையாக பயன்படுத்தி கொள்கிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.

சட்டப்படி எதிர்கொள்வோம்
ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் இயக்கத்தின் மீது பொய் வழக்கு போட்டு,இயக்கத்தின் செயல்பாட்டை நிறுத்தி விடலாம் என்கிற அரசின் எண்ணத்தை மே பதினேழு இயக்கம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். மேலும், இது போன்ற வழக்குகள் மே 17 இயக்கத்தையோ அதன் செயல்பாடுகளையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications