ஏன் எனக்கு மட்டும் "அந்த" ஆசை இருக்கக் கூடாதா?... கேட்கிறார் திருநாவுக்கரசர்!
புதுக்கோட்டை: யார் யாரோ முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அன்பழகனுக்கு அடுத்து அதிக அளவில் எம்.எல்.ஏவாக, எம்.பியாக அதிக முறை இருந்த நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கசர்.
ஒரு காலத்தில் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல்வாதியாக திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக அதிமுகவில் வலம் வந்தவர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக, ஜெயலலிதா வசமாவதற்காக முக்கியத் தூணாக இருந்து பல காரியங்களை ஆற்றி, ஜெயலலிதா வசம் அதிமுக முழுமையாக செல்லக் காரணமாக இருந்த வெகு சிலரில் திருநாவுக்கரசருக்கு தனி இடம் உண்டு.
அதன் பின்னர் தனிக் கட்சி கண்டார். பாஜகவில் இருந்தார். தற்போது காங்கிரஸில் இருக்கிறார். புதுக்கோட்டைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அதிலிருந்து....

வளர்ந்த நாடாக இந்தியா திகழ காங். காரணம்
காங்கிரஸ் கட்சியின் 130வது ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றத்தந்ததனர். மேலும் இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக வளர்வதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்.

பணத் துணையுடன் வென்ற பாஜக
பாஜகவிற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் உள்ள பெரிய தொழிலதிபர்களின் பணத்துணையோடு தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமராக ஆகியுள்ளார். ஆனால் அவர் ஆட்சி பொறுப்பேற்று 200 நாட்கள் ஆகியும் இதுநாள் வரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து செயல்படுவதற்கும் நாட்டிற்கு பிரதமராக இருப்பதற்கும் என்ன சிரமம் இருக்கும் என்பதை இப்போது மோடி நன்கு உணர்ந்திருப்பார்.

வெளிநாடு வாழ் இந்தியர் மோடி
மோடி வெளிநாடு வாழ் இந்தியராக தான் உள்ளாரே தவிர இந்தியாவின் பிரதமராக அவர் இல்லை. 5 ஆண்டு திட்டத்தை உருவாக்கி இந்தியாவை வளர்ச்சி பாதையில் செலத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு மற்றொரு அமைப்பு அமைக்க போவதாக அறிவித்துள்ளனர். மற்றொரு அமைப்பு ஏற்பட்டால் என்ன மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்பது தெரியவில்லை

காங்கிரஸ பலப்படுத்த வேண்டும்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டிற்கு மேல் உள்ளது. தற்போது தலையான பணியாக இருப்பது காங்கிரஸ் கட்சியை பலபடுத்த வேண்டும். அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு கட்சியும் அவர்களின் கட்சியை பலப்படுத்துவதை தான் செய்து கொண்டுள்ளனர்.

விளம்பரத்தால் வளர்ந்தவர் மோடி
பொதுத்தேர்தலின் போது மோடிக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் முக்கியத்துவம் இன்னமும் மக்கள் மனதில் தங்கியுள்ளது. இதுதான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம். இதுவிரைவில் மாறும். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதிகாரிகள் அமைச்சர்கள் அவர்களை அழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

ஏன் நான் ஆசைப்படக் கூடாது...!
தமிழக முதல்வராக யார் யாரோ ஆசைப்படும் போது நான் ஆசைப்பட கூடாதா? கலைஞர் மற்றும் அன்பழகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏ மட்டுமல்லாது எம்பியாகவும் இருந்தவன் என்ற முறையில் எனக்கும் முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது.

மதமாற்றம் பாஜகவை காலி செய்யும்
பாஜக சம்பந்தப்பட்ட சங்பரிவார் இந்து முன்னனி விஎச்பி ஆகியவை தொடர்ந்து மதமாற்றம் செய்வதிலேயும் நாட்டை பிளவு படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இது பாஜகவிற்கு பெருத்த பின்னடைவை தான் ஏற்படுத்தும். இவைகளை தடை செய்வது குறித்து நான் கருத்து கூறமுடியாது.

கோட்சேவுக்குக் கோவில் கண்டனத்துக்குரியது
கட்சியின் தலைமை தான் கருத்து கூறமுடியும். கோட்சேவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது.

ஜெ. மு... ஜெ.பி
தமிழக அரசை பொறுத்த வரை இரண்டு பிரிவாக பிரிக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைப்பதற்கு முன் மற்றும் அதற்கு பின்னர் என்று பிரித்து கொள்ள வேண்டும். அவர் தன்டனை பெற்ற பிறகு நடக்கும் ஆட்சி என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. மக்களை சந்திக்கும் முதல்வராக ஓபிஎஸ் ஆக வேண்டும்.

பாரதரத்னாவுக்குப் பொருத்தமானவர் வாஜ்பாய்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது அளித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அவர் அந்த விருதிற்கு மிகவும் பொறுத்தமானவர். வாஜ்பாயோடு மோடியை ஒப்பிடுவது என்பது முடியாத காரியம் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications