இந்திரா காந்தி நினைவு தினம்: திருநாவுக்கரசர், குமரி அனந்தன், குஷ்பு மரியாதை
இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினம் இன்று சத்திய மூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது.
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 32-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சத்திய மூர்த்திபவனில் அவரது உருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல சர்தார் வல்லபாய் பட்டேலின் 102-வது பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கும் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல் டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அக்கட்சியினர் இன்று அமைதி பேரணி நடத்தினர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த பேரணி இந்திரா காந்தி நினைவிடம் வரை நடைபெற்றது. பேரணியில் காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.