பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்த திருநாவுக்கரசர்... மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர். இவர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்தவகையில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து திருநாவுக்கரசர் பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லூர், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், தொடர்ந்து பி.பி.குளம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயக்கமடைந்த அவர், அருகில் இருந்த வேட்பாளர் மீது சாய்ந்தார். இதனால், உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொடர் பிரச்சாரம் காரணமாக அவர் களைப்படைந்து, உடலில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் அடைந்ததாக தெரிவித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, திருநாவுக்கரசர் மயங்கி விழுந்ததால் அங்கிருந்த மற்ற தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.