இந்த இளைஞரின் நிலை வேறு யாருக்கும் வரக் கூடாது...!
திருப்பூர்: தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக மது பாட்டில்களை புதுச்சேரியிலிருந்து வாங்கி வந்து திருப்பூரில் அதிக விலைக்கு விற்று வந்த இளைஞரை போலீஸார் கைது செய்ததால், அவரது தந்தை நிர்க்கதியாகியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. 63 வயதான இவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிலரின் ஆலோசனைப்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது மகன் 32 வயது குமார் தனது தந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரிக்குக் கூட்டிச் சென்று வந்து கொண்டிருந்தார்.
மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமல் திணறிய குமார், புதுச்சேரியில் விலை குறைவாக கிடைக்கும் மது வகைகளை வாங்கி வந்து திருப்பூரில் அதிக விலைக்கு விற்று அதில் வந்த காசை வைத்து தந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த மது விற்பனையில் நல்ல காசு கிடைக்கவே அதை பெரிய அளவில் செய்யத் தொடங்கி விட்டார்.
ஒவ்வொரு முறையும் சிகிச்சைக்காக புதுச்சேரிக்குப் போகும்போது அதிக அளவிலான மது பாட்டில்களை வாங்கிக் கொள்வார். அதை ரகசியமாக திருப்பூருக்குக் கொண்டு வருவார். அங்கு வந்து அதிக விலைக்கு விற்பார்.
அதேபோல நேற்றும் குமார், 146 மதுபாட்டில்களை புதுச்சேரியிலிருந்து ரகசியமாக வாங்கி வந்து திருப்பூரில் விற்றுள்ளார். இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. விரைந்து வந்த போலீஸார் குமாரைக் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மகன் சிறைக்குப் போய் விட்டதால் தந்தை திருப்பதி செய்வதறியாமல் உள்ளாராம்.












Click it and Unblock the Notifications