ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் தண்டிக்கப்பட்டதால் மக்கள் மீது இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது எதிர்கட்சிகளின் விஷமத்தனமான பிரசாரம். திராவிட கட்சிகளிக்கு மாற்றாக நாங்கள் வளர்ந்து வருகிறோம்.
இந்தியாவே எதிர்பார்க்கிறது
அதிமுக, தி.மு.க, இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். இந்த இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்கு தெரியும். ஊழலால் ஒரு முதல்வர் தண்டிக்கப்பட்டதால் மக்கள் மீது தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் தேர்தல் முடிவை இந்தியாவே எதிர்பார்கிறது என்று தெரிவித்தார்.
மாற்றம் நிகழும்
மாற்று சக்தி என்று சொல்லும் பாஜக கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் 1.13 சதவீதம் வாக்குகள் பெற்றதாகவும், இவர்களால் எப்படி தி.மு.க. வை ஒழிக்கமுடியும்? ஒரு போதும் அவர்களின் கனவு பலிக்காது என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.இது கனவல்ல நிஜம். அந்த மாற்றம் நிகழத்தான் போகிறது.
அரசியல் தெரியாதா?
திராவிட கட்சிகளிக்கு மாற்றாக நாங்கள் வளர்ந்து வருகிறோம். ஒரு நேரம் வாங்கும் ஓட்டுதான் அடுத்த நேரமும் வாங்கமுடியும் என்பதல்ல. ஒரு சீட்டை கூட பெற முடியாத தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த வரலாறும் உண்டு. 2 சீட்டை பெற்றிருந்த பாஜக இப்போது அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்த வரலாறும் நடந்து இருக்கிறது. அரசியல் தெரிந்த ஸ்டாலினுக்கு இந்த அரசியல் மாற்றங்கள் தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.
மாற்றம் நிகழும்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும் மாற்றத்தை எங்களால் கொண்டுவரமுடியும் என்பதை மோடி நிரூபித்து வருகிறார். தமிழகத்திலும் வளர்ச்சியை கொண்டுவர வேண்டும். மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிறோம். எனவேதான் தமிழகத்தில் காலூன்ற விரும்புகிறோம்.
நிரூபிக்க ஒரு வாய்ப்பு
ரங்கராஜன் குமார மங்கலம் திருச்சி தொகுதியில் உறுப்பினராக இருந்த போது பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார். இதையெல்லாம் மக்களிடம் பிரசாரம் செய்வோம்.
ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் ஊழலுக்கு துணைபோகாதவர்கள் என்பதை நிரூபிக்க ஒருவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதை நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சுப்ரமணியம் மனுதாக்கல்
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிப்.13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.சுப்ரமணியம் அறிவிக்கப்பட்டார்.
இவர் திண்டுக்கல் சாலை சோழன் நகரில் உள்ள ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மனோகரனிடம் சனிக்கிழமையன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அங்கீகாரப்படிவம்
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் விஜயகுமார், மாநகர் மாவட்டத் தலைவர் விஜயராஜன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிரப்பிய தமிழிசை
பாஜக சார்பில் மனுத் தாக்கல் செய்தபோது, கட்சித் தலைமை சார்பில் அளிக்கப்படும் அங்கீகாரப் படிவத்தை (ஏ, பி) பூர்த்தி செய்யவில்லை. இந்த படிவத்தை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே அமர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்தார். எம்.பி தேர்தலின் போது பாஜக வேட்பாளருக்கு கட்சி சார்பில் அங்கீகாரக் கடிதம் அளிக்கப்படாத காரணத்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
18 மனுக்கள் தாக்கல்
ஸ்ரீரங்கத்தில் இதுவரை வரை 18 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சனிக்கிழமையன்று பாஜக வேட்பாளர் சுப்ரமணியம், ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் ஹேமநாதன், ஆதித்தனார் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் பால், சுயேச்சை வேட்பாளர்களாக பெரியசாமி, பாண்டியன் ஆகிய 5 பேர் மனு தாக்கல் செய்தனர். வெள்ளிக்கிழமையன்று வேட்புமனு அளித்த ரஜினி ரசிகர் மன்மதன், சனியன்று கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
நாளை கடைசிநாள்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். 28ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 30ஆம் தேதி. அன்று மாலை, 5.30 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். பிப்ரவரி 13ஆம் தேதி வாக்குப்பதிவும், 16ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.