அழகர் கோவில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்: ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கு ஆரத்தி
மதுரை: பிரசித்தி பெற்ற அழகர் கோவில் நேற்று ஆடித் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவும், ஆடி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழாவும் பிரச்சித்தி பெற்றது.
மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா. கடந்த ஜூலை 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் நிறைவாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. காலை 5.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் என்ற கள்ளழகர் காட்சியளித்தார். தொடர்ந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கோயில் யானை சுந்தரவள்ளி திருத்தேரின் முன் அணிவகுத்தது.
அங்கு இருந்த ஏராளமான பக்தர்கள் காலை 8.35 மணியளவில் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பியபடி திருத்தேரின் வடங்களை பிடித்து தேரை இழுத்தனர். கோயில் தெற்கு கோட்டைவாசல், மேற்கு கோட்டை பகுதியில் உள்ள தேரோடும் சாலை வழியாக சுற்றி வந்த தேர், காலை 10.50 மணிக்கு நிலையை அடைந்தது.
புதிய தேர் மற்றும் பாதை சரியாக இருந்ததால் எந்த சிரமமும் இன்றி 2 மணி 25 நிமிடங்களில் தேர் நிலைக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தேரோட்ட விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பலர் சந்தனக்குடம் எடுத்து வந்து அழகர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சாத்துபடி செய்தனர்.
ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கு ஆரத்தி
திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். டெல்டா மாவட்டங்களை வளப்படுத்திடும் காவிரி ஆற்றில் தண்ணீர் அனைத்து பயிர்களும் செழித்து வளர்ந்து அதன் மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் வளமான வாழ்வை பெற்றிட வேண்டி பவுர்ணமி தினமான நேற்று அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
ஸ்ரீரங்கம் ஆரத்திகுழு சார்பில், நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் பட்டாச்சார்யார்கள், மற்றும் சிவாச்சார்யார்கள், வேதவிற்பன்னர்கள் ஆகியோர் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு காவிரி தாய்க்கு தீபம் ஏற்றி பட்டனர்.












Click it and Unblock the Notifications