திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் கும்பாபிஷேகம்... ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தமிழக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர்.
மகாவிஷ்ணுவின் 108 வைணவ தலங்களில் ஒன்றான பழமை வாய்ந்த திருத்தலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 8ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலில் திருப்பணிகள் பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து, கடந்த 8ம்தேதி யாகசாலை பூஜையும், முதல் கால ஹோமம் நடந்தது. புதன்கிழமை காலை 6 மணிக்கு விசுவரூபம், கும்பாராதனம், காலசந்தியும், மகாசாந்தி கும்ப திருமஞ்சனம், தீர்த்த வினியோகம், 7வது கால ஹோமம், திவ்யபிரபந்தசேவையும் நடந்தது. அனைத்து விமான கலசங்களும் தங்க முலாம் பூசி, வரகு அரிசியால் நிரப்பி, யாகசாலை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இன்று அதிகாலை 3 மணிக்கு விசுவரூபம், கும்பாராதனம், காலசந்தியும், 4.30 மணிக்கு 8வது கால ஹோமம், திவ்யபிரபந்தசேவை, வேதனபாராயணம், 6.30 மணிக்கு பெருமாள் கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பார்த்தசாரதி, ஆண்டாள், வேதவல்லித்தாயார், ரங்கநாதர், கோதண்டராமர், ராமானுஜர், மணவாளமாமுனிகள், ஆழ்வார், ஆச்சார்யர்கள் விமானங்கள் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் வைகாநச ஆகம முறைப்படியும், தென்னாச்சார்ய சம்பிராதயப்படியும் நடைபெற்றது. இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். கூடியிருந்த பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. நேரில் செல்ல முடியாத பக்தர்கள் தொலைக்காட்சிகளில் குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர்.

கூட்ட நெரிசலை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விழாவில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்காக குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தையொட்டி மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு இலவச அன்னதானமும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications