"நாங்க சென்னைப் பசங்கண்ணா.. எங்களுக்கே வலிக்குதே, அவங்களுக்கு எப்படி இருக்கும்" #WeNeedJallikattu
சென்னை மெரீனா கடற்கரையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி பேரணி நடத்தியது அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல ஆயிரம் இளைஞர்கள் கூடி பேரணி நடத்தியது அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த இந்தப் பேரணி சென்னை நகரைக் கலக்கி விட்டது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் வந்திருந்த இளைஞர் படையால் மெரீனா கடற்கரையே குலுங்கிப் போனது.
தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து வந்திருந்தாலும் கூட இதில் கலந்து கொண்டவர்களில் சென்னை இளைஞர்கள்தான் அதிகம். அதுதான் இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
|
சமூக வலைதளத்தின் உதவியால்
இத்தனை இளைஞர்களும் தன்னெழுச்சியாக தலைநகரின் கடற்கரையில் ஒன்று கூடியதற்கு முக்கியக் காரணம் டிவிட்டரும், பேஸ்புக்கும்தான். அதன் மூலமாக ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து திடீரென குவிந்து அசத்தி விட்டனர்.
|
பல ஆயிரக்கணக்கில் வேட்டியுடன்
பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் படை இன்று தலைநகரை மையம் கொண்டு ஜல்லிக்கட்டுக்காக கொடி பிடித்து குரல் கொடுத்த அழகை சென்னை மக்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அதில் இன்னொரு விசேஷம், படித்த இளைஞர்கள் பக்காவாக வேட்டி கட்டி படு பாரம்பரியமாக வீறு நடை போட்டதுதான்.

குடும்பம் குடும்பமாக
இந்தப் பேரணியில் பங்கேற்ற பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டதுதான் விசேஷம். ஆண்களும், பெண்களுமாக இளைஞர்கள் படை படையாக திரண்டு வந்து முழக்கமிட்டபடி பேரணியில் பங்கேற்றனர்.
|
காளைகளுடன்
மாட்டு வண்டிகள், காளை மாடுகளுடனும் பலர் வந்து பேரணியை மேலும் முறுக்கேற விட்டனர். பெண்கள் பலரும் ஆவேசமாக ஜல்லிக்கட்டு எங்களது கலாச்சாரம், பாரம்பரிய உரிமை என முழங்கியது வியக்க வைத்தது.
|
சென்னை பசங்கண்ணா
பேரணியில் கலந்து கொண்ட ஒரு இளைஞர் கூறுகையில் நாங்க படிக்காத இளைஞர் இல்லை. படித்த இளைஞர்கள் என்று ஆவேசமாக கூறினார். இன்னொருவர் கூறுகையில், நாங்க சென்னை பசங்கண்ணா.. எங்களுக்கு ஜல்லிக்கட்டுன்னா என்ன என்றே தெரியாது. பார்த்ததே இல்லை. அப்படிப்பட்ட எங்களுக்கே வலிக்குது. ஆனா காளையோட காளையோ வளர்ந்த மக்களுக்கு எப்படி வலிக்கும் என்று கேட்டது நெகிழ வைத்தது.

தொடருமா?
இந்த தன்னெழுச்சிப் போராட்டம் தொடருமா, மத்திய மாநில அரசுகளை தட்டியெழுப்ப வைக்குமா.. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வழி ஏற்படுத்தித் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தலைநகரில் நடந்த இந்த முதல் மாபெரும் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் நிச்சயம் ஒரு முக்கிய நிகழ்வு என்பதை யாரும் மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications