லேப்டாப் தகவல்கள் திருடியதாக ஸ்கைப்பில் மிரட்டல்.... ப்ளூவேல் குறித்து புதுவை பெண் பகீர் தகவல்
லேப்டாப்பில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாக ரஷ்யாவிலிருந்து ஸ்கைப் மூலம் மிரட்டல் விடுத்ததாக ப்ளூவேல் கேமிலிருந்து மீட்கப்பட்ட புதுவை இளம்பெண் பிரியா திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.
புதுவை: ப்ளூவேல் கேம் விளையாடி கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட புதுவை இளம்பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.
ப்ளூவேல் என்ற அரக்கன் உலகம் முழுவதும் பரவி வருகிறது. 50 நிலைகளை கொண்ட இந்த விளையாட்டை விளையாடுபவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இறுதியில் தற்கொலை செய்து கொள்வதே இதன் நோக்கமாகும்.
புதுவையைச் சேர்ந்த வங்கி ஊழியர் பிரியா (21). இவர் ப்ளூவேல் கேம் விளையாடியுள்ளார். இதனால் மன அழுத்தத்துடன் கடற்கரையில் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை மீட்டனர்.

பெண்ணிடம் விசாரணை
தற்போது ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திடுக் தகவல்களை தெரிவித்தார். விசாரணையில் அவர் கூறுகையில், ப்ளூவேல் கேம் என்றால் எப்படியிருக்கும் என்பதற்காக அந்த லிங்க் உள்ளே சென்று பார்த்தேன்.
Recommended Video


என் தகவல்கள்
லேப்டாப் மூலம் பார்த்தபோது என்னுடைய பெயர், தங்கியிருக்கும் இடம், பணியிடம் உள்ளிட்டவற்ற எனது சுயவிவரங்கள் எனக்கு அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் அந்த விளையாட்டை விளையாடத் தொடங்காமலேயே வெளியே வந்துவிட்டேன். இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் என் லேப்டாப்பில் உள்ள தகவல்கள் திருடப்பட்டதாக எனக்கு திருடிய தகவல்களுடன் மெயில் வந்தது.

அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சியடைந்தேன். இதைத் தொடர்ந்து விளையாட்டை விளையாடுமாறு ரஷ்யாவில் இருந்து ஸ்கைப் மூலம் மிரட்டல் வந்தது. இதனால் பயமடைந்த நான் தனியறையில் அமர்ந்து அந்த விளையாட்டை கடந்த 21-ஆம் தேதி முதல் தொடர்ந்து விளையாடினேன்.

குண்டூசிகளில் குத்து...
அப்போது ரஷ்யாவிலிருந்து ஸ்கைப் மூலம் எனக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன. அதில் குண்டூசியில் 10 இடங்களில் எஃப் 45 என குத்தி கொள்ளுமாறு வந்ததை அடுத்து அதை செய்தேன். பின்னர் கையில் ப்ளூவேல் என பேனாவில் வரைந்து அதன் மேல் குண்டூசிகளால் குத்தி கிழித்து கொண்டேன்.

கடற்கரையில் செல்ஃபி
நான் கையில் ப்ளூவேல் வரைந்துள்ளதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக முழுக்கை டீ சர்ட்களையே அணிந்தேன். ஒவ்வொரு கட்டளையாக செய்து வந்த நிலையில் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து சென்று கடற்கரையில் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அப்போது கடற்கரைக்கு சென்ற நான் மனவிரக்தியுடன் இருந்த நிலையில் போலீஸாரால் மீட்கப்பட்டேன் என்றார் அந்த பெண்.

4 நிலைகள்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ப்ளூவேல் கேமில் 50 நிலைகளில் மொத்தம் 4 நிலைகளை பிரியா விளையாடியுள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தோழிகள், பிரியா ப்ளூவேல் விளையாடுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் தக்க சமயத்தில் சென்றதால் பிரியா மீட்கப்பட்டார். ஸ்கைப் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து மத்திய உள்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாருக்கு பாராட்டு
பிரியாவை மீட்ட போலீஸாருக்கு ரொக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் பிரியாவை சந்தித்த முதல்வர் நாராயணசாமி அவருக்கு ஆறுதல் அளித்தார்.

கரூரில் மற்றொரு சம்பவம்
இதேபோல் கரூரில் நடையனூர் அரசு பள்ளியில் ப்ளூவேல் கேம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அப்போது 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ப்ளூவேல் கேம் விளையாடியபோது கட்டளைக்கேற்ப கையில் ப்ளேடால் கிழித்து கொண்டார். தண்டவாளத்தில் தனியாக நடந்து செல்லுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதால் பயந்த மாணவர், நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நண்பர்கள் விழிப்புணர்வு முகாமுக்கு வந்த போலீஸாரிடம் தகவல் கூறியதால் தற்போது அந்த மாணவரும் மீட்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications