சகாயம் பெயரைச் சொல்லி ரூ.61 லட்சம் மோசடி: ஏமாந்தவர்கள் சகாயத்திடமே புகார்
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் பேரில் திருப்பூரில் ஒருவர் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரிடம் திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் புகார் ஒன்றினை அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன், ஜோதிபாஸ், மாரிமுத்து ஆகியோர் லாரி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் சகாயத்திடம் அளித்துள்ள மனுவில், "ஈரோடு பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜா என்பவர் தனக்கு மதுரை இடையப்பட்டியில் ஆல்வின் கிரானைட்ஸ் என்ற பெயரில் குவாரி இருப்பதாக கூறி அதில் 88 லாரிகள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் எங்களுடன் லாரி தொழிலில் ஈடுபட விரும்புவதாகவும், ஆனால் கிரானைட் குவாரியில் கமிஷன் முடக்கியுள்ளதாக கூறி அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான அபராதத் தொகையை செலுத்தினால், அந்த வாகனங்கள் விடுவிக்கப்படும் என்று கூறி எங்களிடம் ரூபாய் 61 லட்சமும், மேலும் ஒரு 50 ஆயிரமும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார்.
இந்த தகவல் அனைத்தையும் தமிழ்நாடு அரசு முத்திரையிடப்பட்ட போலி கடிதங்களை [email protected] என்ற போலி மின்னஞ்சலில் எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தார். உங்களிடம் நல்ல பழக்கம் உள்ளதாகவும் புகைப்படம் காட்டி எங்களை ஏமாற்றிவிட்டார். தாங்களிடம் போனில் அடிக்கடி பேசுவதாகவும், அவற்றை செல்போனில் பதிவு செய்து எங்களுக்கு போட்டுக் காட்டினார்.
ஆகவே தாங்கள் புகைப்படம் மற்றும் பொய்யான தமிழ்நாடு அரசு முத்திரையிட்ட மின்னஞ்சல் மற்றும் தாங்களுடன் நல்ல பழக்கம் இருப்பதாகவும், கனிமவளத் துறையின் பெயரையும், தாங்களையும் தவறுதலாக வெளியில் சொல்லி எங்களை மட்டுமின்றி இன்னும் பல பேரை அவர் ஏமாற்றி வருவதாக தெரிய வருகிறது, இது குறித்து தக்க நடவடிக்கைக்கும், உரிய விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
இப்புகார் குறித்து கேட்டறிந்த சகாயம், அவர்கள் மூவரையும் இம்மோசடி குறித்து திருப்பூர் போலீசிடம் புகார் மனுவினை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், திருப்பூர் குற்றப்பிரிவிற்கு இப்புகாரினை சகாயம் குழுவினர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மோசடி சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.