150க்கும் மேற்பட்ட வாய்தாக்கள்.. நீதிமன்ற வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஜெ.!
சென்னை: இந்திய நீதிமன்ற வரலாற்றில் யாருமே இந்த அளவுக்கு வாய்தா வாங்கியதில்லை என்று கூறும் அளவுக்கு தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 150க்கும் மேற்பட்ட வாய்தாக்களை வாங்கியவர் முதல்வர் ஜெயலிதா.
இந்த வாய்தாக்கள் காரணமாகத்தான் இத்தனை காலமாக சொத்துக் குவிப்பு வழக்கு பெரும் இழுபறிக்குள்ளாக நேரிட்டது எனலாம்.
இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ள நிலையில் வழக்கு குறித்த சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களை இப்போது பார்ப்போம்...
அக்யூஸ்ட் நம்பர் 1
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கிறார்.
எதியூரப்பா சிறை அறைக்கு எதிரே.. ஜெ.வுக்கு தீர்ப்பு
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா அடைக்கப்பட்டிருந்த பெங்களூர், பரப்பனஅக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டு நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. எதியூரப்பா அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு எதிரேதான் கோர்ட் அமைந்துள்ளது.
2003ல் இடம் மாறிய வழக்கு
1991 முதல் 96 வரையிலான முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது அவர் சேர்த்து சொத்துக்கள் குறித்த வழக்கு இது. 96ல் ஆட்சியைப் பிடித்த திமுக இந்த வழக்கைத் தொடர்ந்தது. பின்னர் 2001ல் திமுக ஆட்சியைப் பறி கொடுத்தது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து திமுகவின் கோரிக்கையின் பேரில் வழக்கை பெங்களூருக்கு மாற்றி 2003ம் ஆண்டு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
250 சாட்சிகள் விசாரணை
இந்த வழக்கில் 250க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். விசாரணையின்போது கடைசி கட்டமாகத்தான் ஜெயலலிதா நேரில் ஆஜரானார். மற்ற சமயங்களில் கோர்ட்டில் நேரில் ஆஜராவதற்கு அவர் விலக்கு பெற்று வரவில்லை.
வழக்கு தொடரும்.. ஆட்சிகள் மாறும்
வழக்கு ஒருபக்கம் இழுவையிலும், நிலுவையிலும் இருந்து வந்த நிலையில், 3 முறை முதல்வராகியுள்ளார் ஜெயலலிதா. 2001ல் 2வது முறையும், அதே ஆண்டில் ராஜினாமா செய்து பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 3வது முறையும் முதல்வரானார் ஜெயலலிதா. பின்னர் 2006ல் திமுகவிடம் ஆட்சியைப் பறி கொடுத்த நிலையில், 2011ல் நடந்த தேர்தலில் மீண்டும் முதல்வரானார்.
வரலாறு காணாத வாய்தாக்கள்
இந்த வழக்கு விசாரணையின்போது அடுத்தடுத்து வாய்தாக்களைக் கேட்டு கோர்ட்டை ஸ்தம்பிக்க வைத்தவர் ஜெயலலிதா. தனு இறுதி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கும் கூட அவர் பலமுறை கோர்ட்டை திணறடித்தார். கடைசியில் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவைத் தொடர்ந்தே அவர் வாக்குமூலம் அளிக்க பெங்களூருக்கு வந்தார்.
150க்கும் மேல் வாய்தாக்கள்
இந்த வழக்கின் விசாரணையின்போது 150க்கும் மேற்பட்ட வாய்தாக்களை வாங்கியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.