ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேரம் அம்பலம்.. ஒளிபரப்பை கட் செய்து விசுவாசம் காட்டும் அரசு கேபிள்
அதிமுக எம்எல்ஏ-க்கள் குதிரை பேரம் நடத்தியதாக பேசப்பட்ட வீடியோ ஆதாரங்களை டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்டவுடன் அதன் சிக்னல் இன்று பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் குதிரை பேரம் நடத்தியதாக டைம்ஸ் நவ் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் டைம்ஸ் நவ் சானல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. சசிகலாவுக்கு 122 எம்எல்ஏ-க்களும், ஓபிஎஸ்ஸுக்கு 12 எம்எல்ஏ-க்களும் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ஆளுநரிடம் விளக்குவதற்காக அவரை சந்திக்க முற்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் எங்கே விலை போய் விடுவார்களோ என்ற அச்சத்தின்காரணமாக 122 எம்எல்ஏ-க்களை கூவத்தூரில் சிறை வைத்தார்.
கூவத்தூரில் கொண்டாட்டம்
கூவத்தூரில் சுமார் 8 நாள்களாக அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏ-க்களுக்கு மது, மாது என சகல வசதிகளும் கிடைத்தன. எம்எல்ஏ-க்களின் அசைவுகள் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதால் அந்த ரிசார்ட்டில் இருந்த அனைத்து ரூம்களையும் சசி கும்பலே புக் செய்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க சட்டமன்றத்துக்கு நேரடியாக அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னணியில் நிச்சயம பணம், தங்கம், அமைச்சர் பதவி உள்ளிட்ட பேரங்கள் இருந்திருக்கலாம் என்று பல்வேறு ஊடகங்கள் அனுமானச் செய்திகளை வெளியிட்டன.
குதிரை பேரம்
இந்நிலையில் டைம்ஸ் நவ் என்ற ஆங்கில செய்தி சேனலும் மூன் டிவியும் இணைந்து ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. அதில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியதை ரகசியமாக டேப் செய்துள்ளனர். அதில் எம்எல்ஏ-க்களை தொகுதிகளுக்கு செல்லவிடாமல் விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலம் கூவத்தூர் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது பஸ்ஸில் ரூ. 2 கோடி வழங்குவதாகவும், எம்எல்ஏ விடுதியில் ரூ. 4 கோடியும், கூவத்தூரில் வைத்து ரூ.6 கோடி என பேரம் பேசப்பட்டதாக இடம்பெற்றிருந்தது.
|
அரசியலில் புயல்
இந்த வீடியோவால் தமிழக அரசியலில் கடும் புயல் கிளம்பியது. ஏற்கெனவே விவசாயிகள் பிரச்சினை, ஹைட்ரோகார்பன் திட்டம், மீனவர்கள் பிரச்சினை, நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்று மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகளும் மறுதேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டைம்ஸ் நவ் வீடியோவால் தமிழக அரசியலில் பெரும் புயல் அடித்துள்ளனர்.
டைம்ஸ் நவ் கட்
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் நிறைய இடங்களில் நேற்று இரவு முதல் கேபிள் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேபோல் இன்றும் பெரும்பாலான பகுதிகளில் அரசு கேபிளில் டைம்ஸ் நவ் சேனல் இணைப்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அரசின் ரகசியத்தை வெளியிட்டதால் இந்த நடவடிக்கை என்றும் தெரிகிறது. மேலும் இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.