யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை: நெல்லையின் 230வது கலெக்டர் உறுதி

திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 52 இடங்களில் தாதுமணல் அள்ளும் குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு மணல் அள்ளுவதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 15 குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அவர் சென்னை கிளம்பிய மறுநாள், நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி திடீரென மாற்றப்பட்டார். மணல் விவகாரத்தில் சமயமூர்த்தி மாற்றப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது.
இந்நிலையில் கோவை கலெக்டராக இருந்த கருணாகரன் நெல்லையின் புதிய கலெக்டராக நேற்று பொறுப்பேற்றார். அவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி ஆகும்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்படும். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும்.
கூடங்குளம் விவகாரம், தாது மணல் விவகாரம் ஆகியவற்றில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றை பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
1790களில் நெல்லை மாவட்டம் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. அப்போதிருந்து செயல்பட்ட கலெக்டர்களில் கருணாகரன் 230வது கலெக்டராக பொறுப்பேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications