மாட்டுக்கறி சர்ச்சை- ஆம்பூர் பிரியாணி திருவிழா திடீர் ரத்து! கனமழை காரணம் - மாவட்ட நிர்வாகம்!
ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் ஆம்பூரில் நாளை முதல் நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தந்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
Recommended Video
திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன் முதலாக ஆம்பூர் பிரியாணி திருவிழா நாளை முதல் வரும் 15-ந் தேதி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரியாணிக்கு புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் கூட இத்தகைய நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதனால் ஆம்பூர் பிரியாணி திருவிழா பெரும் கவனத்தைப் பெற்றது.

விளக்கம் தந்த ஆட்சியர்
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூர் பிரியாணிக்கு தனி அந்தஸ்து கிடைக்கும் வகையில் இத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பிரியாணிகள் உரிய விலையில் வழங்கப்படும். இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் தரப்படும் என்றார்.

மாட்டிறைச்சிக்கு தடை
மேலும் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் என்ன மாதிரியான உணவு வகைகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதி பீப் எனப்படும் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஆம்பூரில் பெரும்பாலான இடங்களில் மாட்டிறைச்சி பிரியாணிதான் கிடைத்து வருகிறது. இதனால் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு
மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளும் திமுக அரசின் கூட்டணிகளே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், திருவிழா நடைபெறும் இடத்திலேயே மாட்டிறைச்சி பிரியாணியை பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்குவோம் என அறிவித்தன. இன்னொரு தரப்போ, அதென்ன பிரியாணிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து திருவிழா நடத்துவது? இந்த பிரியாணி திருவிழாவையே ரத்து செய்ய வேண்டும் என்றது. இதனை இந்துத்துவா சக்திகள் முன்வைத்தன.

பிரியாணி திருவிழா ரத்து
இவ்வளவு சர்ச்சைளை உருவாக்கிய ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது நாளை நடைபெற இருந்த ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாகவே ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டது என்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்.












Click it and Unblock the Notifications