திருப்பூர்: தேர்தல் அலுவலர் மாரடைப்பால் மரணம்... தடைபடாத வாக்குப் பதிவு!
திருப்பூர்: காங்கேயம் அருகே, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆசியரியர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ், 54. இவர் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதி வடசின்னேரிபாளையம் பஞ்சாயத்து, காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்குப்பதிவு பணியில் செல்வராஜ் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். தேர்தல் பணியில் இருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி கீழே சாய்ந்தவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு செல்வராஜை மருத்துவர்கள் பரிசோதித்து முதலுதவி செய்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதை தொடர்ந்து செல்வராஜை அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.
ஆனால், வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் கங்கேயம் அரசு மருத்துமனைக்கு செல்வராஜ் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செல்வராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, மாற்று அதிகாரி மூலம் தொடர்ந்து அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் செல்வராஜ் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications