தமாகாவில் போட்டியிட 4,886 பேர் விருப்ப மனு- அதிமுக, திமுக அதிர்ச்சி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், விருப்ப மனு பெற்று நேர்காணல் நடத்தி முடித்த கையோடு வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட தயாராக இருக்கிறார். அக்கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 4,886 பேர் மனு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அதிர்ச்சியடைந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஜி.கே.வாசன், அப்பாவின் வழியிலேயே தமிழ் மாநில காங்கிரஸ் ( மூப்பனார்) கட்சியை கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் தொடங்கினார்.
1996ல் மூப்பனார் தனி கட்சி தொடங்கியதற்கும், இப்போது வாசன் தொடங்கியுள்ளதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போது ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்த எதிர்ப்பு அலையால் திமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தமாகா பெருமளவில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் முதன்முறையாக தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார் ஜி.கே. வாசன். யாருடன் கூட்டணி என்பதை இன்னமும் அவர் அறிவிக்கவேயில்லை. மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஜி.கே.வாசனை அழைத்து வருகின்றனர், ஆனால் அதற்கு நன்றி சொன்னதோடு நிறுத்திக்கொண்டார் வாசன்.
அதே நேரத்தில் அதிமுகவிடம் இரட்டை படை நம்பரில் வாசன் சீட் கேட்டதாகவும், ஆனால் ஒத்தைபடை தான் என்று அதிமுக கூறிவிட்டதாகவும் தெரிகிறது. விஜயகாந்தின் முடிவுக்காகவே வாசன் காத்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 10 முதல் 12ம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4 ஆயிரத்து 886 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இதுவே வாசனை உற்சாகத்தில் ஆழ்த்தியது, அதே உற்சாகத்தோடு, விருப்பமனு கொடுத்தவர்களிடம் கடந்த 20 முதல் 23ம் தேதி வரை நேர்காணல் நடத்தி முடித்துள்ளார். யாருடன் கூட்டணி அமைக்கலாம்? எவ்வளவு செலவு செய்வீர்கள் என்றுதான் பெரும்பாலும் வாசன் கேட்டாராம்.
அதற்கு வேட்பாளர்கள் பலரும், தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றே கூறியுள்ளனர். சிலரே தனித்து போட்டியிட்டு! பலத்தை நிரூபிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
தமாகா எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ, அந்த கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக அமையும். தமாகா என்றுமே தனது தனித்தன்மையை போதும் இழக்காது என்று கூறியுள்ளார் வாசன். திமுக உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார் வாசன்.