கூட்டணி வைப்பதில் மட்டுமல்ல, வேட்பாளர்களை அறிவிப்பதிலும் வாசன் தாமதம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல கூட்டணி, தேமுதிக ஆகியவை இணைந்துள்ள கூட்டணியில் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார் ஜி.கே.வாசன். அக்கூட்டணியில் வாசன் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் சேர வாசன் தொடர்ச்சியாக முயன்று வந்ததாகவும், அங்கு இரட்டை இலை சின்நத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தல் வந்ததால், தனது தென்னந்தோப்பு சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அக்கூட்டணியில் வாசன் சேரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வாசன் அளித்த பேட்டியில்கூட, கூட்டணி அமைப்பதில் மிகுந்த காலதாமதம் ஆகிவிட்டது. இதற்கு நான்தான் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜி.கே.வாசன் இன்று அளித்த பேட்டியொன்றில், தமாகா கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி தலைவரான பீட்டர் அல்போன்ஸ் மீண்டும் காங்கிரசுடன் இணைந்து கொண்ட நிலையில், மேலும் பல நிர்வாகிகளும் கழன்று கொள்ளும் மனநிலையில் உள்ளனர். இதனால் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் வாசன் இழுபறி நிலையில் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசன் கூட்டணியிலுள்ள மதிமுக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை முழுமையாக அறிவித்துவிட்டன. தேமுதிகவும் பட்டியல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.