பாஜக வலையில் இருந்து நிச்சயம் மீள்வோம்! - ஜெ. பாணியில் எடப்பாடி சொன்ன கதை!
ஜெயலலிதாவின் அரசை வெற்றிகரமாக கொண்டு செல்ல அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை : அதிமுகவின் இரு அணிகள் ஒற்றுமையாக இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக மதுரை பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்ப்பாடி பழனிச்சாமி குட்டிக்கதை ஒன்றை கூறீயுள்ளார்.
மதுரை வைகை ஆற்றில் ஆரப்பாளையம் அருள்தாஸ்புரம், திருமலைராயர்படித்துறை செல்லூர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலங்களை முதல்வர் பழனிச்சாமி நேற்று நேரில் சென்று திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர், எந்த ஒரு செயலையும்வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்த செயலில் ஈடுபடுகிறவர்கள் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார். ஒற்றுமையை உணர்த்துவதற்காக ஜெயலலிதா பாணியில் முதல்வர் பழனிச்சாமியும் ஒரு குட்டி கதை சொன்னார்.
வேடன், புறா கதை
கூட்டம் கூட்டமாக வந்து இரை தேடும் பறவைகளை வேடன் ஒருவன் பிடிக்க திட்டமிட்டு வலை விரிக்க, ஒரு நாள் அவற்றில் சில பறவைகள் சிக்கிக் கொள்ள அவற்றை பிடிக்க வேடன் விரைந்து வந்தானாம். ஆனால் இதைப்பார்த்து மற்ற புறாக்களும் வலைக்குள் சென்று அனைத்து புறாக்களும் முயற்சித்து வலையை அலேக்காக தூக்கிக் கொண்டு பறந்து சென்றதாக தெரிவித்தார்.
யார் வேடன்?
இந்த கதையின் நீதி என்னவென்றால் ஒற்றுமையாக இருந்தால் நாம் அனைவரும் நிச்சயம் ஜெயலலிதா அரசை தொடர்ந்து வழி நடத்திச் செல்லலாம் என்று கதையை முடித்தார். இந்தக் கதையில் வரும் வேடன் யார், சிக்கிக் கொண்ட பறவைகள் யார், மீட்பதற்காக மாட்டிக்கொண்ட பறவைகள் யார் என்பது தமிழக அரசியலை கவனித்து வரும் பொதுமக்களும் ஓ.பிஎஸ் அணிக்கும் நன்கு புரிந்திருக்கும்.