சென்னை வந்தும் மழை பாதிப்பை பார்க்கலையே.. முகுல் வாஸ்னிக் மீது தமிழக காங். கடும் அதிருப்தி
சென்னை வந்தும் மழை பாதிப்பை பார்க்காத மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மீது தமிழக காங்கிரஸ் தலைவர் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை: சென்னையில் முகாமிட்டிருந்தபோதும் மழை வெள்ள பாதிப்பை பார்க்காத காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மீது தமிழக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேலூரில் இந்திரா காந்தி நினைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டார்.

குஷ்புவுடன் சந்திப்பு
இக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முகுல் வாஸ்னிக் தங்கினார். மறுநாள் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்புவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு டெல்லி புறப்பட்டிருக்கிறார் முகுல் வாஸ்னிக்.

பார்வையிடாதது ஏன்?
ஆனால் சென்னையில் முகாமிட்டிருந்த முகுல் வாஸ்னிக், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை கூறியிருக்க வேண்டும். ஆனால் முகுல் வாஸ்னிக் அப்படிச் செய்யவில்லை. மேலிடப் பொறுப்பாளர்களே இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்? என கொந்தளிக்கிறது கதர்சட்டை முகாம்.

சந்ந்திக்காதது ஏன்?
மேலும் மதுவிலக்கு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து போராடியதால் உடநலம் பாதிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையாவது சந்தித்து நலம் விசாரித்திருக்கலாம்.

புறக்கணிப்பதா?
அப்படியே தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இருக்கலாம். இதை எதையுமே செய்யாமல் சென்னையில் முகாமிட்டு குஷ்புவை மட்டும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு போனால் கட்சி வளர்ந்துவிடுமா? என்ற ஆதங்கமும் சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. இது தொடர்பாக டெல்லி மேலிடத்துக்கும் அக்கப்போர் கடிதங்கள் போகத் தொடங்கியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications