சிவாஜி சிலையை மெரினாவிலேயே அமைக்க வேண்டும்... திருநாவுக்கரசர் வேண்டுகோள்!
நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்க்கும் விதமாக தலைவர்கள் சிலைக்கு அருகிலேயே அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை : நடிகர் சிவாஜி கணேசனின் சிலை நினைவு மண்டபத்தில் அமைக்கப்படுவதற்கு மாறாக தலைவர்கள் சிலைக்கு அருகில் மெரினாவிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 16வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிடித் தலைவர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தீவிரமாக வளர்த்த காமராஜரின் தொண்டராக வலம் வந்தவர் நடிகர் சிவாஜிகணேசன். அவரின் செயல்களை சிறப்பிக்கும் விதமாகவே அனைத்து அனுமதிகளையும் பெற்று முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி அவரது சிலையை மெரினா கடற்கரை சாலையில் அமைத்தார்.
இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக நீதிமன்றத்தில் சிவாஜி சிலையை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதன்படி சிவாஜி சிலையை அகற்ற உத்தரவிடப்பட்ட நிலையில் அடையாறு பகுதியில் கட்டப்படும் சிவாஜி நினைவுமண்டபத்தில் அது அமைக்கப்பட உள்ளது.
ஆனால் நினைவுமண்டபங்களுக்கு குறிப்பிட்ட சில மக்கள் மட்டுமே செல்வர், இதனால் மெரினாவில் தலைவர், தமிழ்ப்புலவர்கள் சிலைகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் சிவாஜியின் சிலையை அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் இதை வேண்டுகோளாக விடுக்கிறேன். அவர் இதனை ஏற்று பரிசீலனை செய்ய வேண்டும், என்று திருநாவுக்கரசர் பேசினார்.












Click it and Unblock the Notifications