சேலம்: உரிய ஆவணங்கள் இல்லை... ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப் பட்ட ரூ 1.71 கோடி பறிமுதல்
சேலம்: நேற்று சேலம் மற்றும் நெல்லை பகுதிகளில் தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டது. அதில் ரூ 1.71 கோடி வங்கி ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப் பட்டது எனக் கூறப்படுகிறது.
நேற்று சேலம் தேர்தல் பிரிவு பறக்கும்படை அலுவலர் சரவணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், காவல் துறையினர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற வங்கி ஏ.டி.எம்.களுக்கு பணம் எடுத்துச் செல்லும் கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் ரூ 1.71 கோடி பணம் ஆவணங்கள் இன்றி இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் கொங்கணாபுரம் எஸ்.சீனிவாசன், ஓமலூர் முருகன், வட மாநிலத்தைச் சேர்ந்த பிந்துகுமார் பட்டேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவ்வூழியர்கள் தாங்கள் ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்றவர்கள் எனக் கூறியதைத் தொடர்ந்து, தகுந்த ஆவணங்களைக் காட்டி விட்டு பணத்தை பெற்றுச் செல்லும்படி போலீசார் கூறிவிட்டனர். பறிமுதல் செய்யப் பட்ட பணமானது முதலில் சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ப.லலிதாவதியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல், நேற்று நெல்லையில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ 60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று நெல்லை -தென்காசி சாலையில் அபிசேகப்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே பறக்கும்படை அதிகாரிகள், தாசில்தார் அபுல்ஹசிம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் ரூ 60 லட்சம் ரொக்கப்பணம் பதுக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபத்திரன் என்ற நபர், நெல்லை வங்கியில் இருந்து எடுத்து வருவதாகவும், ரியல் எஸ்டேட் தொழில்செய்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும் பாங்க் பாஸ் புத்தகம், நிலம் வாங்கி விற்பது தொடர்பான ஆவணங்கள், வருமான வரிச்சான்றிதழ் போன்ற எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனால் இதுகுறித்து பறக்கும்படை தாசில்தார் அபுல்ஹசிம், நெல்லை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார். அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.முறையான ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்றுச்செல்லலாம் என தெரிவித்தனர்.
மேலும், வள்ளியூர் அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரு 20 லட்சம் கைப்பற்றப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.