அனைத்து காவலர்களும் காலை 7 மணிக்கு பணியில் இருக்க வேண்டும்.. போலீஸ் டிஜிபி உத்தரவு
காவல்துறையினர் அனைவரும் காலை 7மணிக்கு பணிக்கு வந்து பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிபிசிஐடி, குற்றப்பிரிவு போலீஸ், மாவட்ட எஸ்.பி.க்கள், காவல்துறை ஆணையர்கள்உள்பட அனைவரும் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ஞாயிறு மாலை முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இதனை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ அறிக்கையும் உறுதி செய்தது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான சூழலும், பதற்றமும் பரவி வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக,எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவர் மற்றும் மத்திய தொழிற்படை பாதுகாப்புத் துறை தலைவர் ஆகியோர் உடனடியாக சென்னை செல்ல இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனி விமானத்தில் சென்னைக்கு இன்னும் சில மணி நேரங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட எஸ்.பி.க்கள், காவல்துறை ஆணையர்கள், சிபிசிஐடி, குற்றப்பிரிவு போலீஸ் உள்பட அனைவரும் தங்களின் வாகனங்களுடன் காலை 7 மணிக்கு சீருடையுடன் பணியில் இருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், தமிழகம் முழுவதும் பேக்ஸ் செய்தி பறந்துள்ளது. அதில், காவலர்கள் அனைவரும் விடுமுறையின்றி பணிக்கு வரவேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.