நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதா.. தமிழக சட்டசபையில் நிறைவேறியது
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்த்தன.
நீட் தேர்வு தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று வாதிடப்பட்டது. என்றாலும் மத்திய அரசு நீட் தேர்வில் உறுதியாக இருந்தது.
நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டசபையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் நேற்று சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், மருத்துவ இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே சீரான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே சீரான நுழைவுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ளனர். ஆனால், கிராமங்களில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இல்லை. நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற மாணவர்களுக்கு பொருளாதார வசதியும் இல்லை. எனவே, ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டிய தேர்வாக உள்ளது. அதன் அடிப்படையில் உயர் கல்வி, தொழிற் கல்விக்கான ஒரே சீரான நுழைவுத் தேர்வு மாணவர் களுக்கு பெரும் சுமையாக இருக்கும்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது தமிழ்நாடு மேல் நிலைக் கல்வி வாரியத்தால் வகுத்துரைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து வேறுபட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு இது போன்ற சிரமங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடர தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மட்டு மல்லாது மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவையும் சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தாக்கல் செய்தார்.
அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வரை அரசுப் பணிக்காக தேவைப்படுகிறார்கள். அரசுப் பணியில் இல்லாத மருத்துவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் கிராமங்கள் அல்லது மலைப் பகுதிகளில் மருத்துவப் பணியாற்ற வேண்டும்.
தற்போது மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ஒரே சீரான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. இதனால், தமிழக அரசு பின்பற்றி வரும் நடைமுறைகள் மாறக் கூடியதாக இருக்கும். இதனால் கிராம மக்களுக்கு தரமான உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கும் நோக்கம் பாதிக்கப்படும். எனவே, மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை யில் தற்போதைய நடை முறையை தொடரும் வகையில் சட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.