தமிழக நிதிநிலைமை மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது.... சட்டசபையில் ஆளுநர் ரோசய்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 14-வது நிதிக் குழு பரிந்துரையால் தமிழகத்துக்கான நிதி பகிர்வு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் நிதிநிலைமை மிக மோசமாக பாதிப்படைந்துள்ளதாக சட்டசபையில் ஆளுநர் ரோசய்யா இன்று ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

assembly

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. இந்த உரையில் நிதிநிலைமை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான 17,432 கோடி ரூபாய் நிதியுதவி கோரி, கூடுதல் கோரிக்கை மனுவும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்புப் பணிகளை தாமதமின்றி மேற்கொள்வதற்காகக் கோரப்பட்ட நிதியுதவியை உடனடியாக அளித்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

நிதிநிலைமை மோசம்

பதினான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் மாநிலங்களுக்கிடையேயான நிதிப் பகிர்வில் தமிழகத்தின் பங்கு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகமான சூழல் மாநிலத்தின் நிதிநிலையை மோசமாகப் பாதித்துள்ளது.

இத்துடன், தொடர்ந்து வரும் பொருளாதாரத் தேக்க நிலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவால் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறைந்து வருவது போன்ற பாதிப்புகளுடன், மத்திய அரசுத் திட்டங்களின் நிதிப் பங்களிப்பு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் மாநிலத்தின் நிதிச்சுமையை மேலும் கூடுதலாக்கியுள்ளன.

எனினும், வளர்ச்சியிலும், பொருளாதார வளத்திலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை எட்டிட வேண்டும் என்ற நோக்கில், அனைத்து நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மாநில அரசு தொடர்ந்து தொய்வின்றி செம்மையாகச் செயல்படுத்தி வருகிறது.

ஜி.எஸ்.டி. மீதான நிலைப்பாடு

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு உறுதியான, தெளிவான நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்த வரியை நடைமுறைப்படுத்த அரசியல் திருத்தச் சட்ட முன்வடிவு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, இழப்பீடு ஈடுசெய்யும் காலம், இழப்பினைக் கணக்கிடும் முறை, நிகர வருவாய் இழப்பு ஏற்படாத வரி அளவு, குறைந்தபட்ச வரி கட்டு, வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருட்கள், மாநிலங்களுக்கிடையேயான வரிவிதிப்பு முறை, இரட்டை நிர்வாகக் கட்டுப்பாடு குறித்த தெளிவு ஆகிய முக்கிய இனங்களின் மீது ஒருமித்த கருத்தை எட்டிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிதி சுயாட்சி மற்றும் நிரந்தர வருவாய் இழப்பு ஆகியன குறித்த மாநிலங்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+