தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டுதான் உயிர் வாழ வேண்டுமா?- டெல்லியில் போராட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நேற்று மனித மலத்தை தின்று நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் மதியம் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஒருவேளை உணவு கூட கொடுக்க முடியாத காரணத்தால் மனித மலத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென் இந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடக்கிறது.
நூதன போராட்டம்
மணலில் புதைந்து போராட்டம், உருண்டு போராட்டம், அரை நிர்வாண போராட்டம் என தினமும் ஒரு நூதன போராட்டத்தை விவசாயிகள் மேற்கொண்டு கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
மனித மலம் உண்ணும் போராட்டம்
57வது நாளான நேற்று மனித மலத்தை தின்னும் போராட்டத்தை நடத்தினர். ஏற்கனவே சிறுநீர் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மனித மலத்தை தின்று கவனத்தை ஈர்த்தனர்.
உணவு தரமுடியவில்லை
செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தமிழக விவசாயிகள் கடந்த 56 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்களை பிரதமர் சந்திக்க மறுத்து வருகிறார். விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருக்கு ஒருவேளை உணவு கூட தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயிர்வாழ வேண்டுமே
அதனால், நாங்கள் உயிர் வாழ்வதற்காக மனித மலத்தை தின்னும் போராட்டம் நடத்தினோம். இதை பார்த்த பிறகாவது கோரிக்கையை நிறைவேற்ற பிரதமர் முன்வர வேண்டும் என்று கூறினார். உலகத்திற்கே உணவளிக்கும் தமிழக விவசாயிகள் மனித மலம் உண்டு போராட்டம் நடத்தியுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித மாமிசம் சாப்பிடுவோம்
மனித மலத்தை தின்று போராட்டம் நடத்திய விவசாயிகள் இனி மனித மாமிசத்தை சாப்பிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலிக்கறி தின்று போராட்டம் நடத்தியவர்கள் இனி மனித கறி சாப்பிட திட்டமிட்டுள்ளனர்.