தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முன்னுரிமை கொடுப்போம்: ராஜ்நாத்சிங்
சென்னை: தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னுரிமை கொடுக்கும் என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சித் தலைவர்களான தேமுதிகவின் விஜயகாந்த், மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருடன் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு விவரமும் தொகுதிகள் விவரமும் அறிவிக்கப்பட்டன.

அப்போது செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது:
இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு நன்றி.
இந்த கூட்டணி அமைய பாடுபட்ட தமிழருவி மணியனுக்கும் மிக்க நன்றி. தமிழக மீனவர் பிரச்சனை என்பது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் தமிழக மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முன்னுரிமை கொடுக்கும்.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணததற்கு காங்கிரஸ் அரசே காரணம். அதேபோல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கவனம் செலுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து நடந்து கொள்ளும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
அத்வானியின் விருப்பம்..
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத்சிங், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அத்வானி போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போபாலிலா அல்லது காந்திநகரிலா எங்கு போட்டியிடுவது என்பதை அத்வானியே முடிவு செய்வார் என்றார்.












Click it and Unblock the Notifications