எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல்
எடப்பாடி அரசு எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக அரசு பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முத்தரசன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா நேற்று முகநூலில், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பை அடுத்து அதற்கு இன்று வருத்தம் தெரிவித்தும், அது தன்னுடைய பதிவில்லை என்றும் எச்.ராஜா இன்று விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

சுப.வீரபாண்டியன் கருத்து
இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறுகையில், எச்.ராஜா மீது உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும். இந்த விளக்கங்களை எல்லாம் அவர் அங்கு போய் சொல்லிக்கொள்ளட்டும். தமிழகம் ஒரு போதும் இனி அவரை மன்னிக்காது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்தே இப்படி ஒரு மன்னிப்பை கோரி இருப்பது தெளிவாகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வன்மமான பேச்சு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தெரியாமல் போட்டுவிட்டதாக சொல்வது ஏற்புடையதல்ல. ஏற்கனவே பெரியார் மீது வன்மம் கொண்டு எச்.ராஜா பேசி இருக்கிறார். எதிர்ப்பு எழுந்ததை அடுத்து வேறு வழி இல்லாமல், தனது கருத்தில் இருந்து பின் வாங்கி இருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் தேசியச் செயலாளர் இப்படி வரம்பு மீறி பேசுவது என்பது சரியான விஷயம் அல்ல. தமிழர்களை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பெரியார் தமிழகத்தின் சொத்து
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், எச்.ராஜா ஆணவத்தின் உச்சியில் இருக்கிறார். வன்மமான கருத்தை பரவவிட்ட எச்.ராஜாவை பெரியாரின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு இதிலும் வாய் மூடி இருக்காமல் உடனடியாக ராஜாவைக் கைது செய்ய வேண்டும். பெரியார் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தம். எனவே, ராஜாவின் இந்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்படவேண்டும்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தியா முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றது. கருத்தை பதிவிட்டு ஒரு நாளுக்குப் பிறகு, தற்போது தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று சொல்வது கையாலாகத்தனம். திருப்பத்தூரில் சிலை உடைப்பு சம்பவம் இதனாலேயே நடந்து இருக்கிறது எனவே, உடனடியாக வழக்குத் தொடரப்பட்டு எச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications