வாக்கி டாக்கி ஊழலை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறாரா புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்?
தமிழகத்தை அதிர வைத்துள்ள வாக்கி டாக்கி ஊழலை சிபிஐ விசாரிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என கூறப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள போலீஸுக்கான வாக்கி டாக்கி கொள்முதல் ஊழலை சிபிஐ விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் உத்தரவிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகக் காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் தொலைத் தொடர்பு கருவிகள் வாங்கப்படுகின்றன. இதற்காக, வாக்கி டாக்கி வாங்கும் திட்டத்துக்காக 88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த டெண்டரில் பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று பங்கேற்றது.
அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிறுவனம் மீதும் அதிகாரிகள் மீதும் தமிழக உள்துறை செயலகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதனையடுத்து, டி.ஜி.பி ராஜேந்திரனுக்குக் கடிதம் எழுதியிருந்தார் உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி.
விடை தெரியாத புதிர்கள்
டெண்டரில், ஒரே நிறுவனம் மட்டுமே பங்கேற்றால், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கக் கூடாது என அரசு விதி உள்ள நிலையில், விதியை மீறி பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது ஏன்? இவ்வளவு பெரிய தொகையைப் போட்டியின்றி ஒரே நிறுவனத்துக்குக் கொடுப்பது குறித்து அரசின் பார்வைக்குக் கொண்டு வராதது ஏன்? தொலைத்தொடர்பு உரிமம் பெறாத நிறுவனத்திடம் வாக்கி டாக்கிக்கான டெண்டர் ஏன் கொடுக்கப்பட்டது? காவல்துறையை நவீன மயமாக்குவதற்கு அரசு சார்பில், ரூபாய் 47.56 கோடி ஒதுக்கப்பட்டது.
கூடுதல் தொகைக்கு கொள்முதல்
ஆனால், வாக்கி டாக்கி வாங்குவதற்கு ரூ83.45 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? ஒதுக்கப்பட்ட நிதியைவிட இரண்டு மடங்கு தொகைக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்டது ஏன்? டெண்டரில் பங்கேற்ற 'மோட்ரெல்லா இந்தியா' என்ற ஒரே ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பது இதன் உண்மைத் தன்மையை சந்தேகிப்பதாக இருக்கிறது.
அந்த 11 கேள்விகள்
இந்த நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பிக்கும்போது, வாக்கி டாக்கி கருவிகளை இறக்குமதி செய்வதற்கு உரிய முகவர் உரிமை லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை. எனினும் அந்த நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது ஏன்? என்பன உள்ளிட்ட 11 கேள்விகளை எழுப்பி, இதற்கான பதிலை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரிடம் திமுக மனு
காவல்துறையில் நடந்துள்ள வாக்கி டாக்கி ஊழல் குறித்து, ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். இதன்பேரில் தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் மௌனம் சாதிப்பது ஏன்?' எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், டெண்டரில் பங்கேற்ற நிறுவனத்துக்கு லைசென்ஸ் உரிமையே இல்லை. லைசென்ஸே இல்லாத நிறுவனத்துக்கு ஆதரவாக அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். ரூ47,000 மதிப்புள்ள வாக்கி டாக்கியை ரூ.2.08 லட்சம் ரூபாய்க்கு 4,000 கருவிகளை வாங்கியிருக்கின்றனர். இந்தக் கூடுதல் தொகைக்கு புதிதாக 16,000 வாக்கி டாக்கிகளை வாங்கியிருக்கலாம்.
ஊழல் புகார் கூறியதால் மாற்றம்?
ஊழல் புகார் கூறிய நிரஞ்சன் மார்டியை மாற்றும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து டி.ஜி.பி விசாரணை நடத்துவது நியாயமாக இருக்காது. சி.பி.ஐ விசாரணை நடந்தால்தான், மோட்டரெல்லா நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டவர்கள் யார் என்ற உண்மை வெளியில் தெரியவரும். சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் கேட்கலாம். புதிய ஆளுநர் இந்த விவகாரத்தைக் கையில் எடுப்பாரா என்பது மிக முக்கியமான கேள்வி என்கிறார்.
அடுத்தடுத்து வரும் ஊழல்கள்?
தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஊழல் மிகுந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது எனவும் பா.ஜ.க நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். இதன்பேரில் விசாரணை நடத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.கவை கால் ஊன்றுவதற்கு அதிரடியான சில நடவடிக்கைகள் தேவை. அதன் ஒருபகுதியாகத்தான் வாக்கி டாக்கி ஊழல் அம்பலமாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு ஊழலாக வெளியில் வரும். புதிய ஆளுநரின் செயல்பாடுகளை மக்கள் பார்க்கப் போகின்றனர் என்கின்றன பா.ஜ.க வட்டாரங்கள்.