கோர்ட் வளாகங்களில் வக்கீல்கள் போராட்டம் நடத்த தடை- தமிழக அரசு புதிய சட்ட திருத்தம்!
சென்னை: நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்த தடை விதித்துள்ளது; அப்படி போராட்டம் நடத்தினால் நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியிலும் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுவாக வழக்கறிஞர்கள் மீது உயர்நீதிமன்ற பதிவாளர் அளிக்கும் புகாரின்பேரில் பார் கவுன்சில் மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுத்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் மோதிக் கொண்டு மண்டை உடைந்த சம்பவமும் அரங்கேறியது.
இந்த நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தத்தைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இத்தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்த புதிய சட்டத்தின்படி
- நீதிபதிகள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியாற்ற தடைவிதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம், முற்றுகைப் போராட்டம், பதாகைகள் ஏந்திச் செல்லக்கூடாது
- நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்கள் மது அருந்திவிட்டு வந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
- குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும்.
- இந்த புதிய சட்டத் திருத்தம் கடந்த 25-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications