தேர்தல் கூட்டணி தொடர்கிறதா? பாஜக தெளிவுபடுத்த வேண்டும்: அன்புமணி
சிவகாசி: லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவகாசி ஏ.ஜெ. ஸ்டேடியத்தில் விருதுநகர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் அகில இந்திய அளவில் சப்-ஜூனியர்களுக்கான இறகு பந்து போட்டி திங்கட்கிழமை தொடங்கியது. மாநில இறகு பந்து கழக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

தொடக்கவிழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், தமிழக வீரர்கள் தேசிய அளவில் விளையாடி அதிக பரிசுகளை வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களும் இறகுபந்து விளையாட வேண்டும். அவர்களும் சர்வதேச போட்டியில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்,''கடந்த ஆண்டு தமிழகத்தில் மதுவிற்பனையின் மூலம் அரசுக்கு ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.
மதுக்கடைகளை மூடவில்லை
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தமிழக அரசு கடைகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.
பாலியல் குற்றங்கள்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவிட்டன. தினசரி கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதற்குக் காரணம் மதுதான்.
மீனவர்கள் தாக்குதல்
தமிழக மீனவர்களை இலங்கை அதிகாரிகள் தாக்கினால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள் என்கின்றனர். ஆனால், குஜராத்தில் மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? மீனவர்கள் பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன்.
காங்கிரஸ் கட்சியைப் போல
இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் செய்ததையே பா.ஜ.க. அரசும் செய்கிறது. ஐக்கிய நாடுகள் குழுவுக்கு இந்தியா விசா மறுத்தது கண்டிக்கத்தக்கது.
கூட்டணி தொடர்கிறதா?
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் அமைக்கப்பட்ட பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா? என்பதை பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications