கூடங்குளம் போராட்டத்தை போல கெயில் எதிர்ப்பையும் அரசு ஒடுக்க வேண்டும்: சென்னை ஹைகோர்ட்

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக பெங்களூருக்கும் அங்கிருந்து மங்களூர் வரை பூமிக்கடியில் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த பணியை கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த பணி 2010ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டு விட்டது. தமிழகத்தில் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி, இந்த திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெயில் இந்தியா நிறுவனத்தை எதிர்த்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
கருத்து கேட்பு
இந்த வழக்கை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்து 7 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்டு அதன்பிறகு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 7 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கணிப்பு கூட்டத்தை கூட்டி விவசாயிகளிடம் கருத்து கேட்டனர்.
தமிழக அரசு தடை
இதை தொடர்ந்து நிலங்களை ஆர்ஜிதம் செய்வதையும், எரிவாயு குழாய் அமைப்பதையும் நிறுத்தி தமிழக அரசு உத்தரவிட்டது. கெயில் நிறுவன பணிக்கும் அரசு தடை விதித்தது.
தடையை எதிர்த்து வழக்கு
பொது நலன் கருதி இந்த திட்டத்தை விரைவாக முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் மனுதாக்கல் செய்தார். திட்டத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று கெயில் இந்தியா நிறுவனம் தனியாக வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து அரசு திட்டத்துக்கு தடை விதித்ததை நீக்க கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் கெயில் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
தடை நீக்கி உத்தரவு
இந்த வழக்கில் நேற்று தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், விவசாயிகள் பாதிக்கப்படுவதால் விவசாய நிலங்கள் வழியாக பைப் லைன் அமைக்கக்கூடாது என்று தற்போதைய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக பைப் லைன் அமைத்து கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது. இதை ஏற்க முடியாது. தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறோம்.
கூடங்குளத்தைப் போல ஒடுக்குங்கள்
கெயில் நிறுவனம் ஏற்கனவே முக்கால்வாசி பணிகளை மேற்கொண்டு விட்டது தெளிவாக தெரிகிறது. பைப் லைன் அமைக்கும்போது விவசாயிகள் போராட்டம் நடத்தி சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தினால் கூடங்குளத்தில் போராட்டத்தை அரசு எப்படி அடக்கியதோ அதேபோல் இதையும் அடக்கி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். கெயில் இந்தியா நிறுவனம் தனது பணிகளை செய்ய அரசு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications